கொடுமை.. 'ஆசிட் கூல்ட்ரிங்ஸ்' கொடுத்த சக மாணவர்.. கிட்னி செயலிழந்து உயிரிழந்த 6ம் வகுப்பு மாணவன்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே 6-ஆம் வகுப்பு மாணவனுக்கு ஆசிட் கலந்த குளிர்பானத்தை வழங்கிய சக மாணவனால் இரண்டு கிட்னிகள் செயல் இழந்து உயிருக்கு போராடி வந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், மெதுகும்மல் பகுதியைச் சேர்ந்தவர் சுனில். இவரது 11 வயது மகன், அதங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6- ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 24 ம் தேதி தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு சென்றுவிட்டு தேர்வு எழுதி முடிந்து மதியம் வீட்டிற்கு வருவதற்காக சுனில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு அதே பள்ளி சீருடையில் வந்த மாணவன் ஒருவர் சுனிலுக்கு குளிர்பானத்தை கொடுத்து குடிக்கச் சொல்லியுள்ளார்.

தட்டி விட்ட குளிர்பான பாட்டில்
சுனிலும் அதை வாங்கி குடித்துக் கொண்டிருந்த போது பின்னால் இருந்த வந்த வேறு ஒரு மாணவன் தெரியாமல் தட்டிவிட்டதால் குளிர்பான பாட்டில் கீழே விழுந்துவிட்டது. இதையடுத்து சுனில் வழக்கம்போல் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் இருந்த சிறுவனுக்கு இரவு நேரத்தில் திடீரென குளிர் காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.

சிறுவனுக்கு அதிக காய்ச்சல்
அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுவனை அழைத்துக் கொண்டு மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காய்ச்சலுக்கு மருந்து வாங்கி வந்துள்ளனர். இருந்தும் சிறுவனுக்கு காய்ச்சல் குறையாமல் இருந்துள்ளது. மேலும் சிறுவனின் வாய் நாக்கு உள்ளிட்ட பகுதிகளில் புண்கள் ஏற்பட்டுள்ளது.

பதற்றம்
இதனால் பதற்றமடைந்த பெற்றோர் சிறுவனை அழைத்துக் கொண்டு நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுவனை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது சிறுவன் அருந்திய குளிர்பானத்தில் ஆசிட் கலந்து கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

2 சிறுநீரகங்கள்
அத்துடன் சிறுவனின் இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்து இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் களியக்காவிளை போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவன் கடந்த 3ஆம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

குளிர்பானம் கொடுத்த மாணவர் எங்கே?
சுனிலுக்கு குளிர்பானம் கொடுத்த மாணவனை போலீஸார் தேடி வருகிறார்கள். சுனிலுக்கு ஆசிட் கலந்த குளிர்பானத்தை அந்த மாணவன் எதற்காக கொடுத்தான் என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. இதனிடையே கடந்த 14 நாட்களாக தனியார் மருத்துவமனையில் மிகத் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சுனில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications