அதிகாலையில் கன்னியாகுமரி ராணுவ வீரர் வீட்டு கதவை தட்டிய பெண்.. பிடித்து விசாரித்தால் பெரிய ட்விஸ்ட்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே அதிகாலையில் பெண் வேடமிட்டு ராணுவ வீரரின் வீட்டு கதவை தட்டிய கல்லூரி மாணவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அந்த கல்லூரி மாணவர் யார் என்று விசாரித்த போது, ராணுவ வீரருடன் ஒரே பள்ளியில் படித்திருக்கிறார். ராணுவ வீரர் வீட்டில் இருப்பதாக நினைத்து வந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க நினைத்தவருக்கு பொதுமக்கள் மறக்க முடியாத பரிசை கொடுத்துள்ளார்கள்..
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே குருந்தன்கோடு என்ற பகுதியை சேர்ந்த கொத்தனார் ஒருவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் கொத்தனாரின் மகன் காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் ராணுவ வீரரின் வீட்டில் கதவை தட்டும் சத்தம் கேட்டது. இதனால் கண்விழித்த ராணுவ வீரரின் தாயார் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார். அப்போது சுடிதார் அணிந்த ஒரு இளம்பெண் நின்று கொண்டிருந்தார். இதைபார்த்து சந்தேகம் அடைந்த தாயார் பக்கத்தில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் அளித்தார்.
அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அந்த இளம்பெண்ணிடம் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக தெரிவித்தார். தொடர்ந்து அது பெண் அல்ல, பெண் வேடமிட்டு வந்த ஆண் என்பது அவர்களுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்தனர். அடி உதை தாங்காமல் அலறிய அந்த ஆண் வேடமிட்ட வந்த நபர் குறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்ததும் அவர்களிடம் பொதுமக்கள் இளைஞரை ஒப்படைத்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இப்போது அவர் ராணுவ வீரருடன் பள்ளியில் இணைந்து படித்தவர் என்பதும், தற்போது நர்சிங் கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் ராணுவ வீரர் வீட்டில் இருப்பதாக நினைத்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக பெண் வேடமிட்டு வந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். பின்னர் அவரிடம் இருந்து 'இனிமேல் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டேன்' என எழுதி வாங்கிவிட்டு கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். ராணுவ வீரருக்கு, இன்ப அதிர்ச்சி கொடுக்க பெண் வேடமிட்டு சென்ற நண்பருக்கு கன்னியாகுமரி மக்கள், அவர் கொடுக்க நினைத்ததைவிட மறக்க முடியாத பரிசை கொடுத்து அனுப்பி உள்ளார்கள். சம்பவத்தால் இரணியல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications