தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றச் சம்பவங்கள்.. காரணம் இதுதான்.. சட்டென சொன்னார் தருமபுரம் ஆதீனம்
கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்க என்ன காரணம் என்பது குறித்து தருமபுரம் ஆதீனம் கருத்து தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்தின் ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார்.
கடந்த மாதம் இவரது பட்டின பிரவேச நிகழ்ச்சி குறித்த சர்ச்சை தான் பெரும் விவாதம் ஆனது. தருமபுரம் ஆதினத்தைப் பல்லக்கில் கோவிலுக்கு தூக்கிச் செல்வதுதான் பிரவேசத்தின் முறையாகும்.

பட்டினப் பிரவேசம்
பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு முதலில் சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பேசுபொருள் ஆனது. பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட கட்சிகள் பட்டின பிரவேச நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக் கூடாது என்றனர். இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆதீனம்
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து ஆதீனங்களும் முதல்வரைச் சந்தித்த பின்னர், தருமபுரம் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டார். இதையடுத்து பட்டின பிரவேச நிகழ்ச்சி வெகு விமர்சிக்க நடைபெற்றது. இந்தச் சூழலில் இன்று குமரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தருமபுரம் ஆதீனம் மாநிலத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரிக்க என்ன காரணம் என்பதை விளக்கி உள்ளார்.

வரவேற்பு
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் சாமகானப்பிரியன் பேரிகை குழு செயல்பட்டு வருகிறது. இந்த பேரிகைக்கு ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதினம் கலந்து கொண்டார். மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், திருவாவடுதுறை ஆதின மடத்திற்குச் சென்றார். அங்கு பேரிகை குழு சார்பில் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதிகரிக்கும் குற்றம்
இதையடுத்து பக்தர்கள் மத்தியில் பேசிய அவர், "நமது மாணவ செல்வங்கள் நல்ல கல்வியைத் தான் பள்ளிகளில் படிக்க வேண்டும். ஒரு காலத்தில் பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால், இப்போது அந்த வகுப்புகள் எல்லாம் நிறுத்தப்பட்டதால் மாநிலத்தில் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குடும்பங்கள் ஒன்று கூடும் சமயங்களில் சமயத்தைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும்,

தேவாரம்
தமிழகத்தில் சைவசித்தாந்த வகுப்புகள் நடத்த வேண்டும். தேவாரம் படித்தால் வாழ்க்கையில் என்ன தேவை என்பதை அனைவரும் அறிந்து கொள்ளலாம். மலட்டு பசுவிடம் இருந்து எப்படிப் பால் கறக்க முடியாதோ அதேபோலத் தான், கொடுக்கக் கூடாது என்ற எண்ணம் கொண்ட நபரிடம் இருந்து நம்மால் எதையும் பெற முடியாது. இறைவனை உணர்ந்து மனதார வேண்டிக் கொண்டால் நமக்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும். உளவார இறைவனுக்குத் திருப்பணிகளைச் செய்தாலே போதும்!" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications