கன்னியாகுமரியில் கையும் களவுமாக சிக்கிய தமிழரசி .. செய்த வேலை இருக்கே.. ஆடிப்போன மக்கள்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த சிறுவனிடம் தங்க சங்கிலியை பறித்த பெண்ணை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு அடுத்து கேரள எல்லையை ஒட்டி உள்ள கடற்கரையில் உள்ள நகராட்சி கொல்லங்கோடு... இதன் அருகே உள்ள மார்த்தாண்டன் துறையை சேர்ந்தவர் ராஜன். இவருக்கு 35 வயது ஆகிறது. மீனவரான இவர், கடலில் மீன் பிடித்து வாழ்ந்து வருகிறார். இவரது மனைவி ஷைஜி . ராஜன் ஷைஜி தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

மாட்டு பொங்கல் பண்டிகையான நேற்று காலை சுமார் 11 மணியளவில் சிறுவன் வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறான். அப்போது அந்த சாலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்திருக்கிறார். சிறுவனை சுற்றி யாரும் இல்லாததால், திடீரென சிறுவனின் அருகில் சென்றிருக்கிறார் அந்த பெண். சுற்றி முற்றி பார்த்த அவர், திடீரென கழுத்தில் கிடந்த 6 கிராம் எடையுள்ள தங்க சங்கிலியை பறித்துள்ளார்.
இதனிடையே தன் அருகில் ஒரு பெண் வந்து, கழுத்தில் கிடந்த சங்கிலியை பறிப்பதை பார்த்து, உடனே 6 வயது சிறுவன் கதறி அழுதான். அவனது சத்தம் கேட்டு அவரது தாயான ஷைஜி வீட்டில் இருந்து வெளியே வேகமாக ஓடி வந்தார். அப்போது நகையை பறித்த பெண் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க தொடங்கினார். இதைபார்த்து ஷைஜி, 'திருடி... திருடி...' என சத்தம் போட்டிருக்கிறார்
அவரது சத்தம் கேட்டு, என்னவென்று பார்த்த பொதுமக்கள் ஓடி வந்து, நகையை பறித்த அந்த பெண்ணை சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து கொல்லங்கோடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் நேரில் வந்து அந்த பெண்ணை அழைத்து சென்று விசாரித்தனர். . போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்த தமிழரசி என்பது தெரியவந்தது.
பொதுமக்களிடம் கையும் களவுமாக சிக்கிய தமிழரசி தூத்துக்குடி மாவட்டம் உவரியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தின் பெயரை சொல்லிக்கொண்டு, காணிக்கை கேட்டு வீதிகளில் வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து தங்க சங்கிலியை மீட்டனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
வீட்டின் முற்றத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுவனிடம் தங்க சங்கிலியை பறித்த பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications