அவர் வந்தா தான் மகனுக்கு கல்யாணம்; எவ்வளவு நாளானாலும் சரி; காத்திருக்கும் திமுக மாஜி அமைச்சர்!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன், தனது மகன் திருமணத்திற்காக முதலமைச்சரிடம் தேதி கேட்டு காத்திருக்கிறார்.
தற்போதைய சூழலில் உடனடியாக தேதி கொடுப்பது கடினம் என முதல்வர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டும், தனது மகனுக்கு திருமணம் என்று நடந்தால் அது ஸ்டாலின் தலைமையில் தான் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் சுரேஷ்ராஜன்.
இந்நிலையில் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் திருமண விழாவுக்கு தேதி கொடுக்க முன்வந்துள்ளாராம் முதலமைச்சர் ஸ்டாலின்.

முன்னாள் அமைச்சர்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் தனது மகன் தமிழரசனுக்கு திருமணம் நிச்சயித்து அதற்கான தேதி கேட்டு முதலமைச்சர் ஸ்டாலினை அண்மையில் சந்தித்து பேசியிருக்கிறார். இப்போதைய சூழலில் தனக்கிருக்கும் அலுவல் பணிகளை எடுத்துக்கூறி, மனைவி துர்காவை அனுப்பி வைப்பதாக முதல்வர் தெரிவித்திருக்கிறார். இதற்கு எத்தனை நாட்களானாலும் சரி நீங்கள் வராமல் மகனுக்கு திருமண விழாவை நடத்தமாட்டேன் என பிடிவாதமாக நின்றிருக்கிறார் சுரேஷ்ராஜன்.

3 மாதம் பிஸி
மாஜி அமைச்சரின் விடாப்பிடியால் ஒரு வழியாக திருமண விழாவுக்கு வர முதல்வர் உறுதியளித்துள்ளாராம். ஆனால் அடுத்த 3 மாதங்கள் பிஸியாக இருப்பதால் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தான் முதல்வரின் தேதி கிடைக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அண்மைக்காலமாக திமுக எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் என பலரும் தங்கள் மகன் அல்லது மகள் திருமண விழாவை முதலமைச்சரின் இல்லத்திலேயே வைத்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

முக்கியப் பிரமுகர்கள்
அப்படித்தான் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டி, திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் தரணிவேந்தன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் இல்ல மண விழா கூட நடைபெற்றது. ஆனால் சுரேஷ்ராஜனோ, குமரி மாவட்டத்தில் உள்ள தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்னிலையிலும், ஸ்டாலின் தலைமையிலும் மகன் திருமணத்தை நடத்த வேண்டும் என்பதற்காக முதல்வரை நாகர்கோவிலுக்கு அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

பதவியில் இல்லை
இதனிடையே நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் காந்தியிடம் தோல்வியை தழுவிய சுரேஷ்ராஜனை, நாகர்கோவில் மேயர் தேர்தலில் களமிறங்குவாறு அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஏற்கனவே எம்.எல்.ஏ. சீட் வாய்ப்பையும் வாங்கி மீண்டும் மேயர் சீட் வாய்ப்பையும் வாங்கினால் அது மாவட்டத்திற்குள் கட்சியினரின் அதிருப்தியை சம்பாதிக்கக்கூடும் என்பதால் அவர் இதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. எம்.எல்.சி. ஆகி அதன் மூலம் மீண்டும் அமைச்சராக வேண்டும் என்பதே அவரது இலக்கு எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications