தாறுமாறாக ஓடி.. நடந்து சென்றவர்களை அடித்து தூக்கிய ஜேசிபி - குமரி தவெக தொண்டர் உட்பட 2 பேர் பலி!
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் ஜேசிபி கிரேன் வாகனம் சாலையோரம் நடந்து சென்ற பாதசாரிகள் மீது கண்மூடித்தனமாக மோதியது. இதில் அப்பகுதியில் உள்ள தனியார் கேட்டரிங் சென்டரில் படித்து வரும் சபரி என்கிற நபரும் தவெக நிர்வாகி முகமது ஷான் என்பவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். ஜேசிபி ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி சுற்றுலா தலத்தில் நெருக்கடி மிகுந்த சாலையாக கருதப்படுவது சர்ச் சாலை ரயில்வே ஸ்டேஷன் சாலை மற்றும் ரவுண்டானா. இப்பகுதியில் எப்போதும் அதிகமாக கூட்டம் இருக்கும். இந்நிலையில் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் இருந்து சர்ச் ரோடு வழியாக ரவுண்டானா செல்லும் சாலையில் இருந்து ஒரு ஜேசிபி வாகனம் தறிகெட்டு அதிவேகத்தில் வந்து மக்கள் மீது மோதியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடி பகுதியைச் சேர்ந்தவர் கணபதி. இவர், கனரக ஜேசிபி மற்றும் கிரேன் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை இவர் ஜேசிபி கிரேன் வாகனத்தில் விவேகானந்தபுரம் பகுதியில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்தார். சர்ச் ரோடு அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜேசிபி, சாலையில் தாறுமாறாக அங்குமிங்குமாக வேகமாக ஓடியது. அப்போது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
தொடர்ந்து, நிற்காமல் சென்று சாலையோரம் நடந்து சென்ற இளைஞர் ஒருவர் மீதும், இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொருவர் மீதும் மோதியது. மேலும், நடைபாதையில் நிறுத்தப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனங்கள் மீது மோதி, சுவற்றில் இடித்து நின்றது. இந்தக் கோர விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் காயமடைந்த ஓட்டுநர் உட்பட 4 பேரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த இருவரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கிரேன் மோதி உயிரிழந்தது அஞ்சுகிராமம், மைலாடி அவரிவிளையைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவர் சபரிகிரி (19) , கன்னியாகுமரி ஹை கிரவுண்ட் பகுதியை சேர்ந்த தவெக நிர்வாகி முகமது ஷான் (35) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதில், தவெக நிர்வாகி முகமது ஷான் சொந்தமாக துணிக்கடை நடத்தி வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அவருக்கு திருமணமாகி இருக்கிறது. ஜேசிபி ஆபரேட்டர் கணபதி மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் குமரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications