ரயில் விபத்திலும் மதவெறி.. இஸ்லாமியர் காரணமா? அவதூறு பரப்பிய பாஜக ஆதரவாளரை கைது செய்த குமரி போலீஸ்
கன்னியாகுமரி: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக மத பிரச்சனையை தூண்டும் வகையில் அவதூறு பதிவை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக பாஜகவை ஆதரவாளரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.
உலகையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து நடந்து ஒரு வாரம் ஆகப்போகிறது. இருப்பினும் அது தொடர்பாக பரபரப்புகள், சர்ச்சைகளும், செய்திகளும் ஓய்ந்தபாடில்லை. குறிப்பாக இதை வைத்தும் மத வெறுப்புணர்வை தூண்டும் செயலில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஒடிசாவில் பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், யஸ்வந்த்பூர் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், ஸ்டேஷனரி பொருட்களை ஏற்றி வந்த சரக்கு ரயில் மூன்றும் ஒன்றோடு ஒன்று மோதி தடம் புரண்டன. கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் நிகழ்ந்த இந்த ரயில் விபத்தில் 280 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து உள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கோல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டு இருந்ததது. தமிழ்நாட்டை சேர்ந்த 84 பயணிகள் அதில் பயணித்து உள்ளார்கள். மற்றொரு பயணிகள் ரயிலான யஷ்வந்த்பூர் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் மேற்கு வங்க மாநிலம் ஹவுரா நோக்கி பெங்களூருவில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது.
விபத்தில் சிக்கி உயிரிழந்த சிலரது உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. விபத்து ஏற்பட்டவுடன் தீயணைப்பு படையினர், மீட்பு படையினர், போலீசாருடன் இணைந்து ஒடிசா மாநில மக்களும் களத்தில் இறங்கி உதவினர். காயமடைந்தவர்களுக்கு ரத்த தானம் வழங்க ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் காத்திருந்தனர். இது மனிதாபிமானத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.
நிலைமை இப்படி இருக்க இந்த ரயில் விபத்தையும் மத வெறுப்புணர்வை தூண்டுவதற்கான வாய்ப்பாக சிலர் பயன்படுத்தி வருவதுதான் வேதனை. கடந்த சில நாட்களுக்கு முன் ரயில் விபத்து நிகழ்ந்த இடத்துக்கு அருகே மசூதி ஒன்று இருப்பதாக சந்தேகத்தை தூண்டும் பதிவுகளை சிலர் பதிவிட்டு வந்தார்கள். கடைசியில் அது இஸ்கான் கோயில் என்பது உறுதியானது. இதற்கு ஒடிசா காவல்துறையும் மறுப்பு தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில்தான், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த பாஜக ஆதரவாளரான செந்தில் குமார் என்பவரும் இதை மத பிரச்சனையாக மாற்றும் வகையில் ஒரு பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார். அதில், விபத்து நிகழ்ந்த ரயில் நிலையத்தின் மேலாளர் ஒரு இஸ்லாமியர் என்றும் அவர் தப்பி ஓடிவிட்டதாகவும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார்.
இந்த நிலையில் அவர் வெளியிட்ட புகைப்படம் பழையது என்றும், அவர் பரப்பிய தகவலில் உண்மை இல்லை என்றும் உறுதியானது. இந்த நிலையில் ஒடிசா ரயில் விபத்தை மதப் பிரச்சனையாக்கும் வகையில் வதந்தி பரப்பியதாக செந்தில் குமார் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications