”என்னோட லைலா வரால்லே ஸ்டைலா” ஓடும் ரயில் அருகே ரீஸ்ல் வீடியோ! குமரியில் 5 பேர் மீது பாய்ந்த ஆக்ஷன்
குமரி: குமரி மாவட்டம் இரணியல் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ரயில் வரும் போது ரீல்ஸ் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பெண் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜய்யின் பத்ரி படத்தில் வரும் "என்னோட லைலா வராலே ஸ்டைலா" என்ற பாடலுக்கு ஆபத்தை உணராமல் ரயில் வந்துகொண்டிருக்கும் போதே ரீல்ஸ் வீடியோ எடுத்த நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
இன்ஸ்டாவில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு அதிக லைக்ஸ்களை பெற வேண்டும் என்பதற்காக பலரும் வித்தியாசமான முறையில் வீடியோ பதிவு செய்கிறார்கள். லைக்ஸ்களுக்காக உயிரை கூட பணயம் வைத்து வீடியோ எடுக்கிறார்கள்.

ரயில் மேற்கூரை மீது ஏறி வீடியோ
இவ்வாறு ரிஸ்க் எடுக்கும் போது சில சமயங்களில் அது ஆபத்தில் முடிந்துவிடுகிறது என்றபோதிலும் இது மாதிரியான சம்பவங்கள் குறைந்தபாடில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பும் தூத்துக்குடி அருகே இன்ஸ்டாகிராமில் அதிக லைக்ஸ்கள் பெற வேண்டும் என்பதற்காக சரக்கு ரயில் மீது இளைஞர்கள் சிலர் வீடியோ எடுக்க முயற்சித்துள்ளனர்.
இதில் ரயிலின் மேற்கூரை மீது ஏறி வீடியோ எடுத்தபோது, உயரழுத்த மின்கம்பி உரசியதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இன்ஸ்டாவில் அதிக லைக்ஸ் பெற வேண்டும் என்பதற்காக அந்த இளைஞரின் உயிரே பறிபோயுள்ளது. இது தொடர்பாக போலீசார், சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு செய்தாலும் இதுபோன்ற சம்பவம் குறைந்தபாடில்லை.
விஜய் பாடலுக்கு நடனம்
இந்த நிலையில் தான் குமரி மாவட்டம் இரணியல் ரயில் நிலையம் அருகே இன்ஸ்டாவில் லைக்ஸ் பெற வேண்டும் என்பதற்காக, ஆபத்தான முறையில் ரயில் வரும்போது ரீல்ஸ் எடுத்த பெண் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
கோடிமுனையை சேர்ந்த பரதவிஷால், நாகர்கோவிலை சேர்ந்த ஷகாய ஜெனிஷா என்ற பெண் உள்பட 5 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குமரி மாவட்டம் இரணியல் ரயில் நிலையம் வந்துள்ளனர். இன்ஸ்டாவில் தொடர்ந்து வீடியோ பதிவிட்டு வரும் இவர்கள் அன்று விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்தில் இடம்பெற்றுள்ள "என்னோட லைலா வராலே ஸ்டைலா" என்ற பாடலுக்கு ரீல்ஸ் எடுக்க நினைத்தனர்.
5 பேர் மீது வழக்கு
அதன்படி தண்டவாளம் அருகே அமர்ந்தபடியும், நடந்து சென்றபடியும், டான்ஸ் ஆடிக்கொண்டும் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். தண்டவாளத்தில் ரயில் வந்துகொண்டிருக்கும் போதும் ஆபத்தை உணராமல் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில் போலீசார் கண்ணிலும் பட்டுள்ளது.
இதையடுத்து இந்த வீடியோவை பார்த்த போலீசார், பரதவிஷால், ஷகாய ஜெனிஷா உள்ளிட்ட 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆபத்தை உணராமல் ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதுபோன்று வீடியோ எடுக்க கூடாது என்றும் அறிவுறுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications