உருக்குலைந்த கன்னியாகுமரி... வெள்ளத்தில் சிக்கிய இரட்டை பச்சிளம் குழந்தைகள் அண்டாவில் வைத்து மீட்பு
கனமழை வெள்ளத்தால் உருக்குலைந்துள்ளது கன்னியாகுமரி. அங்கு வெள்ளத்திலும் இருளிலும் மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி: தொடர்கனமழையால் கன்னியாகுமரி மாவட்டமே வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. மின்சாரம் இன்றி கடந்த 4 நாட்களாக இருளில் சிக்கித் தவித்து வருகின்றனர். இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ள குமரி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை உயிரை பணயம் வைத்து பலரும் மீட்டு வருகின்றனர். மீட்புப்படையினர். இரண்டு பச்சிளம் குழந்தைகளை பத்திரமாக மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்
குமரி மாவட்டத்தில் கடந்த 11ம் தேதி நள்ளிரவில் இருந்து தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்தது. தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்ததுடன், அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் பல மடங்கு அதிகரித்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது.
தாமிரபரணி ஆறு, வள்ளியாறு, பழையாறு, கோதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதன் காரணமாக கரையோர கிராமங்களில் இருந்த மக்கள் நேற்று முன்தினம் காலையில் இருந்தே அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு துறை, காவல் துறையினர் மீட்பு படகுகள் மூலமும், கயிறு கட்டியும் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மூழ்கிய குடியிருப்புகள்
பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுசீந்திரத்தில் ஏராளமான குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த பகுதியில் நேற்று முன் தினம் இரவு முதல் விடிய, விடிய மீட்பு பணி நடந்தது. நேற்று காலையிலும் வீடுகளில் இருந்தவர்களை கயிறு கட்டியும், படகு மூலமும் மீட்கும் பணி நடந்தது. பல இடங்களில் மாடிகளையும் வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளில் இருந்தவர்களை தீயணைப்பு துறையினர் படகு மூலம் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மழை வெள்ளத்தால் வீடுகளில் இருந்த டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மிதந்தன. அவற்றை மீட்டெடுக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

உருக்குலைந்த கன்னியாகுமரி
சுமார் 50 ஆயிரம் வீடுகள் தற்போது வெள்ளத்தில் மிதக்கின்றன. கிராமங்களில் 3 வது நாளாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கீரிப்பாறை, தெரிசனங்கோப்பு மற்றும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி பகுதிகளில் உள்ள மலையோர கிராமங்களில் சாலைகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளதால், மலையோர கிராமங்களுக்கான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. பல கிராமங்களில் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கி உள்ளது.

சிக்கிய மக்கள்
குளச்சல் பகுதியில் உள்ள வெள்ளியாக்குளம் திடீரென உடைந்ததால் குளத்தில் உள்ள வெள்ள நீர் அருகில் உள்ள சிங்கன்காவு குடியிருப்பு பகுதியில் புகுந்தது. இதில் 30க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்ததோடு வீட்டிற்குள்ளும் புகுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் வீட்டிற்குள் சிக்கி இருந்த 100க்கும் மேற்பட்டவர்களை பாதுகாப்பாக மீட்டனர்.

இரட்டை குழந்தைகள் மீட்பு
இந்த நிலையில், அந்த குடியிருப்பில் அர்ஜூனன் என்பவர் வீட்டிற்குள் இடுப்பளவு வெள்ள நீர் புகுந்த நிலையில் அந்த குடும்பத்தினர் 3மாத இரட்டை கை குழந்தையுடன் வீட்டில் சிக்கி தவித்த நிலையில் தீயணைப்பு துறையினர் அந்த குழந்தைகளை இடுப்பளவு வெள்ளத்தில் பத்திரமாக அண்டாவில் வைத்து மீட்டனர். குழந்தைகள் மீட்கப்பட்ட சில நிமிடங்களில் அந்த வீட்டின் தரைத்தளத்தை வெள்ளம் மூழ்கடித்தது.

அமைச்சர் ஆய்வு
கன்னியாகுமரி வெள்ளப்பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், குமரி மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகள் மட்டுமல்ல எங்கெல்லாம் நன்செய் நிலங்கள் உள்ளதோ, அவை முழுவதும் கட்டிடமாக மாறியதால்தான் இதுபோன்ற மோசமான விளைவுகள் வந்ததற்கு காரணம் என்று கூறியுள்ளார்.

அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை எதிரொலியாக தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் முக்கிய அணைகளான பாபநாசம், சேர்வலாறு அணைகள் நிரம்பி வரும் நிலையில் உபரி நீர் ஷட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் தாமிரபரணி ஆற்றில் 8 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டதால் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. குற்றாலம் மெயினருவியில் 2வது நாளாக நேற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் பிற அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.












Click it and Unblock the Notifications