கன்னியாகுமரியில் அடிக்கடி காதலன் வீட்டில் தனிமையில் மாணவி.. பக்கத்து வீட்டுக்காரரால் ட்விஸ்ட்
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் நர்சிங் மாணவி, கல்லூரிக்கு செல்வதாக கூறி, அடிக்கடி காதலன் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அங்கு காதலன் எல்லை மீறுவதை வழக்கமாக வைத்திருந்தாராம். இதனை கண்ட பக்கத்து வீட்டுக்காரர் காதலன் வெளியே சென்ற நேரம் பார்த்து நர்சிங் மாணவியிடம் அத்துமீறி உள்ளார். அப்படி அத்துமீறியது குறித்து புகார் கொடுக்க சென்ற போது காதலனும் சிக்கியுள்ளார்.
கன்னியாகுமரி சவேரியார்புரம் சுனாமி காலனியை சேர்ந்த 20 வயதாகும் ஆல்வின் மீன்பிடி தொழிலாளியாவார். இவருக்கும் தாழக்குடி பகுதியை சேர்ந்த 17 வயதுடைய ஒரு நர்சிங் கல்லூரி மாணவிக்கும் இடையே 2 ஆண்டுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருக்கிறது. நர்சிங் கல்லூரி மாணவி, கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு, அடிக்கடி காதலன் ஆல்வின் தனியாக வசித்து வந்த வீட்டுக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதை பக்கத்து வீட்டில் வசிக்கும் 51 வயதாகும் டிரைவர் ரகுநாதன் என்பவர் கண்காணித்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஆல்வின் மாணவியை தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். சிறிது நேரத்தில் ஆல்வின் வெளியே சென்றுள்ளார். அப்போது வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்திருக்கிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று காத்திருந்த ரகுநாதன் திடீரென வீட்டுக்குள் நுழைந்து மாணவியிடம் அத்துமீற முயன்றாராம். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சல் போட்டார். உடனே ரகுநாதன் அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து மாணவி காதலனிடம் கூறி அழுதுள்ளார். தொடர்ந்து மாணவி கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் பேரில் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ரியோலின், நர்சிங் மாணவி மற்றும் காதலனிடம் விசாரணை நடத்தினார். அப்போது மாணவியை காதலன் ஆல்வின் தனது வீட்டுக்கு அழைத்து வந்து திருமண ஆசைகாட்டி பலாத்காரம் செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து மாணவியின் காதலன் ஆல்வின் மீதும், பக்கத்து வீட்டுக்காரர் ரகுநாதன் மீதும் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவிலில் சிறையில் அடைத்தனர். பலாத்கார முயற்சியில் ஈடுபட முயன்றவர் குறித்து புகார் அளிக்க சென்ற நிலையில் மாணவியின் காதலனும் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் மாணவி சோகம் அடைந்தார்.












Click it and Unblock the Notifications