சீனாவில் மருத்துவம் படித்த கன்னியாகுமரி மாணவி திடீர் சாவு.. பெற்றோரை நிலைகுலைய வைத்த அடுத்த செய்தி
கன்னியாகுமரி: சீனாவில் மருத்துவ படிப்பை படித்து முடித்து வீடு திரும்ப இருந்த கன்னியாகுமரி மருத்துவ மாணவி காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தார். இதனால் பெற்றோர்கள் சோகத்தில் உள்ள நிலையில், மாணவியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ரூ.21 லட்சம் கேட்பதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே புல்லந்தேரி பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். கோபாலகிருஷ்ணனின் ஒரே மகள் ரோகிணி (வயது 27). இவர் சீனா நாட்டில் மருத்துவம் படிக்க சென்று இருந்தார். டாக்டருக்கு படித்து முடித்து விட்ட மாணவி ரோகிணி, சொந்த ஊருக்கு திரும்ப தயாராகி வந்தார்.

இதனால் ரோகிணியின் பெற்றோரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார்கள். மகளின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்தவர்களுக்கு பேரிடியை போல் அதிர்ச்சி செய்தி ரோகிணியுடன் படிக்கும் சக மாணவிகளிடம் இருந்து வந்தது.
மருத்துவ மாணவி ரோகிணி காய்ச்சல் பாதிப்பால் சீனாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்ததாகவும், சிகிச்சை பலன் இன்றி இறந்துவிட்டதாகவும் சக மாணவிகள் கூறியுள்ளனர். இந்த அதிர்ச்சி செய்தியை கேட்டு ரோகிணியின் பெற்றோர் கதறி துடித்தனர். இந்த துயரம் ஒருபுறம் எனில் ரோகிணி உடலை கொண்டு வர ரூ.21 லட்சம் தேவைப்படும் என அவரது தந்தையிடம் சீனாவில் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரோகிணியின் பெற்றோர், உறவினர்கள் கன்னியமாகுமரி மாவட்ட கலெக்டர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்ககு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.
ஆனால் 4 நாட்கள் ஆகியும் மாணவியை கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாத காரணத்தால் சோகம் அடைந்துள்ளனர்.
சீனாவுக்கு மருத்துவம் படிக்க ரூ.50 லட்சம் என்று பேசி ஏஜென்சி மூலம் மாணவி ரோகிணியை கோபாலகிருஷ்ணன் படிக்க அனுப்பி வைத்துள்ளார். இதுபோக படிப்புக்கு இடையே அடிக்கடி கடன் வாங்கி மகளுக்கு செலவுக்கான பணத்தையும் அனுப்பி உள்ளார். இதனால் அதிக கடனில் சிக்கி உள்ள கோபாலகிருஷ்ணனிடம் ரூ.21 லட்சம் தந்தால் மட்டுமே உடலை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும் என சீனாவில் கூறியுள்ளார்களாம். இதனால் கோபாலகிருஷ்ணன் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்து வருகிறார்.
ஏற்கனவே மகளை இழந்த சோகத்தில் இருக்கும் தந்தை ரூ.21 லட்சம் கொடுத்தால் தான் மகளின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர முடியும் என்கிற நிலையால் குடும்பமே உடைந்து போய் உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு மாணவியின் உடலை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கன்னியாகுமரி பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.











Click it and Unblock the Notifications