கன்னியாகுமரி கிரிஜா.. ஒரே பொய் தான்.. 15 வருடமாக போற இடமெல்லாம் கொட்டிய தங்கம்.. சிக்கியது எப்படி?
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம், அஞ்சு கிராமம், ஆரல்வாய்மொழி உள்பட பல்வேறு பகுதிகளிலும், கேரளாவின பல்வேறு பகுதிகளிலும் கிரிஜா என்ற பெண், நூதனமான முறையில் நகை பறிப்பு மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். அதாவது ஜாதகத்தில் தோஷம் கழிப்பதாக கூறி, கடந்த 15 வருடங்களாக நகைத்திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரை கன்னியாகுமரி போலீசார் கைது செய்துள்ளனர். கிரிஜாவிடம் இருந்து 33 சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் நெய்யாற்றங்கரை, காவலாகுளத்தை சேர்ந்த ராஜகுமரன் மனைவி கிரிஜா, இவருக்கு 54 வயது ஆகிறது. இவரது பூர்வீகம் கன்னியாகுமரி மாவட்டம் ஆகும். இவர் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து நகை பறிப்பு மோசடி செய்து வந்துள்ளாராம் . சுசீந்திரம் அருகே உள்ள நல்லூரைச் சேர்ந்தவர் சாந்தி (வயது 61). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். சாந்திக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். மகள் திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகிறார்.

சாந்தி கடந்த நவம்பர் மாதம் 2-ந் தேதி நாகர்கோவிலுக்கு சென்று விட்டு பஸ்சில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது அருகில் சேலையை தலையில் மூடியபடி அணிந்த நிலையில் ஒரு பெண் அமர்ந்திருந்தார். அவர் சாந்தியின் குடும்ப நிலவரத்தை விசாரித்து கணவர் இறந்ததை அறிந்தார். தொடர்ந்து நலவாரியத்தில் இருந்து விதவை உதவித்தொகை பெற்றுத் தருவதாக கூறியிருக்கிறார். அத்துடன் அதற்காக விண்ணப்பம் செய்ய தேவையான ஆவணங்களை வாங்குவதற்காக சாந்தியுடன் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார. வீட்டில் சென்றதும் தான் வைத்திருந்த குளிர்பானத்தை சாந்திக்கு குடிக்க கொடுத்துள்ளார. அதை குடித்த சிறிது நேரத்தில் சாந்தி மயக்கம் அடைந்துள்ளார்
பின்னர் சாந்தி கண்விழித்து பார்த்த போது அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, கம்மல், மாட்டி மற்றும் பீரோவில் இருந்த வளையல், தங்க சங்கிலி என மொத்தம் 8.5 பவுன் நகைகள் மற்றும் செல்போனை காணவில்லை. அவற்றை அந்த பெண் பறித்து சென்றதை கண்டு சாந்தி திடுக்கிட்டார். இதுகுறித்து சாந்தி சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, கேரள மாநிலம் நெய்யாற்றங்கரை, காவலாகுளத்தை சேர்ந்த ராஜகுமரன் மனைவி கிரிஜா (54) என்பவரை பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சாந்தியிடம் இருந்து 8.5 பவுன் நகையை திருடியதை ஒப்புக்கொண்டார்.
கிரிஜா இது போல் கடந்த 15 வருடங்களாக ஜாகத்தில் தோஷம் இருப்பதாக கூறியும் பல்வேறு வழிகளிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம், அஞ்சு கிராமம், ஆரல்வாய்மொழி உள்பட பல்வேறு பகுதிகளில் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தாராம். இதேபோல் கேரளாவில் இதே பொய்யை சொல்லி நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தாராம். இந்த கிரிஜாவை கன்னியாகுமரி மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர். 15 வருடங்களாக ஏமாற்றி வந்த பெண் இன்று சிக்கியதால் சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.. கிரிஜா மீது ஏராளமான வழக்குகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரிடம் இருந்து 33 சவரன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications