கேரளா கழிவுகளைத் தொடர்ந்து, தெரு நாய்களையும் தமிழக எல்லையில் இறக்கிவிட முயற்சி- கும்பல் சிக்கியது!
கன்னியாகுமரி: கேரளாவின் மருத்துவ கழிவுகளைத் தமிழ்நாட்டுக்குள் வந்து கொட்டிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது கேரளாவின் திருவனந்தபுரத்தில் வீதிகளில் சுற்றித் திரிந்த தெருநாய்களை பிடித்து தமிழ்நாட்டின் கன்னியாகுமரி எல்லையில் கொண்டு வந்து இறக்கிவிட முயற்சித்த கும்பல் வசமாக சிக்கியிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலமானது தமிழ்நாட்டை குப்பைக் கிடங்காகவே கருதும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கேரளாவின் மருத்துவ கழிவுகள், கோழி- மீன் இறைச்சி கழிவுகளை லாரி லாரியாக ஏற்றி வந்து தமிழ்நாட்டு எல்லை கிராமங்களில் கொட்டி விட்டு தப்பி ஓடுவது கேரளா லாரி ஓட்டுநர்களின் வாடிக்கையாக இருந்தது.

தமிழ்நாட்டை தொடர்ந்து குப்பை கிடங்காக கேரளா மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயமும் நேரடியாக தலையிட்டு, கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை கேரள அரசு அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் தலைமையில் மீண்டும் கேரளாவுக்கே எடுத்துச் செல்ல உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில், கேரள அதிகாரிகள் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்துக்கு வந்து, கொட்டப்பட்ட கேரளா மருத்துவ கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கே கொண்டு சென்றனர். இந்த விவகாரத்தில் கேரளா நீதிமன்றமும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
ஆனாலும் தமிழ்நாட்டின் கோவை, நெல்லை, கன்னியாகுமரி எல்லைகளில் கழிவுகளை கொட்டும் போக்கை கேரளா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கட்டச்சல் பகுதியில் கேரளா பதிவெண் கொண்ட நாய் வண்டி பல மணிநேரமாக வலம் வந்து கொண்டே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அந்த நாய் வண்டியை மறித்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், கேரளாவின் திருவனந்தபுரம் தெருக்களில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள் பிடிக்கப்பட்டிருக்கின்றன; இவற்றை திருவனந்தபுரம் புறநகரில் கொண்டு வந்து இறக்கிவிடாமல் அங்கிருந்து நேராக கன்னியாகுமரி கட்டச்சல் பகுதிக்கு கொண்டு வந்து ஒவ்வொரு பகுதியாக தெருநாய்களை இறக்கி விட்டுள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக கன்னியாகுமரி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கேரளா வண்டியில் இருந்து இறக்கிவிடப்பட்ட தெருநாய்கள் மீண்டும் பிடிக்கப்பட்டு கேரளாவுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் கன்னியாகுமரி எல்லையி0ல் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications