அரசு ஊழியருக்கு பாடம் கற்று தந்த விவசாயி.. சாமர்த்தியமான முடிவால் கம்பி எண்ணும் விஏஓ
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் ஹரிப்பாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் பிரீதா என்பவரிடம் விவசாயி ஒருவர், தனது நிலத்தின் பழைய சர்வே எண் கேட்டு விண்ணப்பித்தார். அதற்கு அவர் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து லஞ்சத்தை ஜிபேயில் அனுப்பிய விவசாயி, ஆடியோ ஆதாரத்துடன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதன் காரணமாக தற்போது கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் வாங்க முயன்றாலோ, லஞ்சம் கேட்டாலோ தயக்கமின்றி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் ஆடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம். அப்படி புகார் அளித்தால் ஆய்வு செய்யும் லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனே நடவடிக்கை எடுப்பார்கள். அரசின் வருவாய் துறை அலுவலகங்களில், தாசில்தார், விஏஓ, சர்வேயர் உள்பட பல்வேறு அதிகாரிகள் லஞ்ச புகாரில் கைதாவது இப்படித்தான். அப்படித்தான் கேரளாவின் ஆழப்புழாவில் உள்ள ஒரு கிராமத்தில் பழைய சர்வே எண் வழங்க லஞ்சம் கேட்ட புகாரில் கிராம நிர்வாக அலுவலர் மீது விவசாயி லஞ்ச ஒழிப்பு போலீசில் சாமர்த்தியமாக புகார் அளித்தார். இதனால் அந்த விஏஓ தற்போது சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் ஹரிப்பாடு கிராம நிர்வாக அதிகாரியாக 49 வயதாகும் பிரீதா பணியாற்றி வருகிறார். இவரிடம் அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தனது நிலத்தின் பழைய சர்வே எண் கேட்டு விண்ணப்பித்தார். அதற்கு பிரீதா, பழைய சர்வே எண் வழங்க வேண்டுமானால் ரூ.1,000 'ஜிபே'யில் அனுப்ப வேண்டும் என்று போனில் கூறியிருக்கிறார்.
லஞ்சம் கேட்கும் பிரீதாவின் பேச்சை ஆடியோவாக பதிவு செய்த ஹரிப்பாடு கிராம விவசாயி, பிறகு அவர் கேட்ட லஞ்ச பணத்தையும் 'ஜிபே' மூலம் அனுப்பியிருக்கிறார். பின்னர் பெண் அதிகாரியின் ஆடியோ, 'ஜிபே'யில் பணம் செலுத்திய ஆதாரத்துடன் ஆலப்புழை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் அவர் புகார் அளித்தார். இதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அதிகாரி பிரீதாவை அதிரடியாக கைது செய்தனர்.
கிராம நிர்வாக அதிகாரி, சர்வயேர், தாசில்தார், ஆர்ஐ, பத்திர எழுத்தர், சார் பதிவாளர், காவலர் , மின் பொறியாளர், வரி வசூலிப்பவர், சொத்து வரி பெயர் மாற்றம் செய்யும் மாநகராட்சி அதிகாரி, நகராட்சி அதிகாரி என யாராக இருந்தாலும் இப்படியும் புகார் அளித்து அரசு ஊழியர்களை சிக்க வைக்கலாம். இப்படி செய்வதன் மூலம் லஞ்சம் வாங்கினால் தான் வேலை செய்ய முடியும் என்று நினைக்கும் அதிகாரிளுக்கு பாடம் புகட்ட முடியும்.












Click it and Unblock the Notifications