நில அளவீடு.. கன்னியாகுமரியில் நிலத்தை அளக்க சொன்னால்? திருப்பூர் விஏஓ, சர்வேயர் செய்யும் காரியமா இது
கன்னியாகுமரி: பத்திரப்பதிவு, வருவாய்த்துறைகளில் ஏராளமான லஞ்ச புகார்கள் நிலவிவரும் நிலையில், மின்துறை, பொதுத்துறைகளிலும் இதேபோன்ற லஞ்சப்புகார்கள் மலிந்து வருகின்றன. லஞ்சம் வாங்குவோர் யாராக இருந்தாலும், தயவு தாட்சண்யம் இல்லாமல், சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். அந்தவகையில் நேற்றைய தினமும் கன்னியாகுமரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் லஞ்சப்புகாரில் கைதாகி உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம், மருதுரையான் வலசு அருகேயுள்ள மீனாட்சி வலசைச் சேர்ந்த விவசாயி சாமிநாதன்.. 60 வயதாகிறது.. இவர் கடைகளுக்கு வணிக மின் இணைப்பு கேட்டு, படியூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

விஏஓ டூ சர்வேயர் டூ தலையாரி
அப்போது, மின் இணைப்பு வழங்க, மின்வாரிய உதவி பொறியாளர் வெங்கடேஷ், 45, என்பவர், 10,000 ரூபாய் லஞ்சமாக கேட்டிருக்கிறார்.. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சாமிநாதன், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்திருக்கிறார்.. 10,000 ரூபாய் லஞ்சப் பணத்தை, உதவி பொறியாளர் வழிகாட்டுதலில், போர்மேன் நந்தகோபால் வாங்கியிருக்கிறார்.. அப்போது
அவரை கையும் களவுமாக பிடித்த போலீசார், வெங்கடேஷையும் கைது செய்தனர்.. விசாரணையும் அவர்களிடம் நடக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நில அளவை செய்வதற்காக, ரூ.3500 லஞ்சம் வாங்கிய பனிச்சகுடி விஏஓ, நைனா முகமது 31, தலையாரி சித்ரா 48, இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் 4 நாட்களுக்கு முன்பு கைது செய்திருந்தனர்.. அதுபோலவே, மீண்டும் நிலத்தை அளக்க லஞ்சம் கேட்டு சர்வேயர் கன்னியாகுமரியில் சிக்கியிருக்கிறார்.
நிலத்தை அளக்க லஞ்சம்
ராஜாக்கமங்கலம் மேல தெருவை சேர்ந்தவர் பத்மநாபனுக்கு 71 வயதாகிறது. இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு சொந்தமான நிலத்தை அளக்க அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இது தொடர்பாக நீண்டகரை கிராம உதவியாளர் ராஜாவை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, நிலத்தை அளந்து சான்றிதழ் தர வேண்டுமானால் ரூ.2 ஆயிரம் பணம் வேண்டும் என்றாராம்.

லஞ்சம் அளிக்க விரும்பாத ஸ்ரீபத்மநாபன், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். டிஎஸ்பி சால்வன் துரை ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரம் மதிப்பு நோட்டுகளை சர்வேயர் முகமது அஜ்மல் கான் மற்றும் ராஜாவிடம் ஸ்ரீபத்மநாபன் கொடுத்தார். அதனை 2 பேரும் வாங்கியபோது, போலீசார் இருவரையுமே சுற்றிவளைத்து கைது செய்தனர்.
மின்துறை, பொதுத்துறை
வருவாய்த்துறை, பதிவுத்துறை, மின்துறை மட்டுமல்லாமல் பொதுத்துறையிலும் இதுபோன்ற லஞ்சப்புகார்கள் பெருகி வருகின்றன.. இதே கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 நாளைக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது.
குமரி மாவட்டத்தில் குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. எனவே, திருவட்டார் அருகே அருவிக்கரை மணக்குன்று சிற்றாறு பட்டணம் கால்வாய் பாயும் இடத்திலுள்ள பெரும்குளத்தில் மண் எடுக்க, அதே பகுதியை சேர்ந்த ராமையன் என்பவர் விண்ணப்பித்திருந்தார்.
மண் எடுக்க லஞ்சம்
ராமையனுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதியும் வழங்கப்பட்டுவிட்டது. எனவே, பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இலவச அனுமதி சீட்டு பெறுவதற்கு ராமையன் ஒப்பந்ததாரரான பிரைட்டை அனுப்பி வைத்தார்.. அப்போது பிரைட்டிடம் பொதுப்பணி துறை ஊழியர் ரசல்ராஜ் இலவச அனுமதி சீட்டு வழங்குவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்..
லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரைட் இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யவும்., ரசல்ராஜை போலீசார் கைது செய்தனர்.. கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்கு மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இப்போது அவர் நாகர்கோவில் ஜெயிலில் உள்ளார்.. அவர்மீது அத்துடன் துறை வாரியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சஸ்பெண்டு நடவடிக்கை
அவரை சஸ்பெண்டு செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசு துறைகள் அத்தனையிலும், லஞ்சம் தலைவிரித்தாடுவதுடன், அதில் சிக்கி அதிகாரிகளே கைதாவது பொதுமக்களுக்கு கவலையை தந்து கொண்டிருக்கிறது.
குமரி மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட குளங்களில் வண்டல் மண் தற்பொழுது எடுக்கப்பட்டு வருகிறது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications