கன்னியாகுமரியில் லாரி டிரைவரை கரம்பிடித்த கல்லூரி மாணவி.. காவல் நிலையத்தில் பெற்றோருக்கு ட்விஸ்ட்
கன்னியாகுமரி: திருவனந்தபுரம் காட்டாக்கடை பகுதியைச் சேர்ந்த வின்ஸ்டன் மகன் விபினுக்கு 21 வயது ஆகிறது. இவர் கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே வசிக்கும் பொறியில் கல்லூரி மாணவி அபியாவை இன்ஸ்டாகிராம் பழக்கம் மூலம் பழகி காதலித்து வந்துள்ளார். விபின் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர்களின் காதலுக்காக பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கல்லூரி மாணவியும், லாரி டிரைவரும் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இன்றைக்கு நேரில் பார்த்து காதலிப்பதை விட, இன்ஸ்டாவில் காதலிப்பது அதிகமாக இருக்கிறது. சமூக வலைதளங்களில் ஏற்படும் பழக்கம் காதலாக மாறுகிறது. பள்ளிக்கு போகும் வயதிலேயே காதலில் விழும் சிறுமிகள் காதலுக்காக பள்ளி படிப்பையும், கல்லூரி படிப்பையும் தொலைப்பது அதிகமாக உள்ளது. சரியான வாழ்க்கை துணை அமைந்தால் இவர்களுக்கு சிக்கல் இருக்காது.

மாறாக எதிர்பாராத விதமாக வாழ்க்கை துணையாக வரும் நபர், வெறும் இனக்கவர்ச்சியில் காதலித்திருந்தாலோ அல்லது காமத்தின் பேரில் காதலித்திருந்தாலோ வாழ்க்கை துயரமாகிவிடுகிறது. அதேநேரம் உண்மையாக காதலிப்பவர்கள் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தாலும், சில காலங்களில் தங்களின் வாழ்க்கையால், பெற்றோரே அரவணைக்கும் வகையில் மாறுகிறார்கள். ஒருவரை ஒருவர் புரிந்து காதல் ஜோடிகள் நடந்து கொண்டு, திருமண வாழ்க்கையில் இருந்தால் சிக்கல் இருக்காது. கன்னியாகுமரி காதல் ஜோடி பற்றி பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே மாங்கோடு ஊராட்சி கள்ளிமூடு பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் என்பவருடைய மகள் அபியாவுக்கு 20 வயது ஆகிறது. இவர்மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் காட்டாக்கடை பகுதியைச் சேர்ந்த வின்ஸ்டன் மகன் விபினுக்கு 21 வயது ஆகிறது. இவர் லாரி டிரைவராக உள்ளார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் மூலமாக அபியாவுக்கும், விபினுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி அபியா திடீரென காணாமல் போய்விட்டார். இதனை அறிந்த பெற்றோர் பதற்றமடைந்து உறவினர்கள், கல்லூரி நண்பர்களிடமும் விசாரித்துள்ளார்கள். ஆனால் அபியாவை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. இதுகுறித்த புகாரின் பேரில் அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து அபியாவை தேடி வந்தார்கள். இதற்கிடையே விபின், அபியாவை அழைத்துச் சென்ற விவரம் தெரியவந்தது.
இதனை அறிந்த காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தது. பிறகு இருவருடைய பெற்றோரும் வரவழைக்கப்பட்டனர். அங்கு தங்களுடன் வரும்படி அபியாவின் பெற்றோர், கெஞ்சி அழைத்தனர். ஆனால் அபியா பெற்றோருடன் செல்லவில்லை. தாங்கள், நெய்யாற்றின்கரை கோவிலில் விபினை திருமணம் செய்து கொண்டதாகவும், காதலனுடன் தான் செல்வேன் என திட்டவட்டமாக உறுதியாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து காதலனுடன், அபியாவை போலீசார் அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications