Maha Shivratri 2025: கன்னியாகுமரியில் 110 கிமீ சிவாலய ஓட்டம்- அலை அலையாக பக்தர்கள் பங்கேற்பு!
கன்னியாகுமரி: மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலயங்களை ஓட்டமும் நடையுமாக சென்று தரிசனம் செய்யும் சிவாலய ஓட்டம் நேற்று தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தின் முதன்மையான சிவாலயங்களை தரிசனம் செய்யும் இந்த சிவாலய ஓட்டம் இன்றும் நடைபெறுகிறது.
மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது. இன்று இரவு முதல் நாளை காலை வரை சிவாலயங்களில் விடிய விடிய விழித்திருந்து வழிபாடு நடத்தப்படும். சிவாலயங்களில் சிவபெருமானுக்கு விசேஷ பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறும். இதற்காக உலகம் முழுவதும் சிவாலயங்கள் களை கட்டி இருக்கின்றன.

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டம் நடைபெறும். சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் ஒரு வாரத்துக்கு முன்னரே மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்குவர். ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிவாலயங்களில் பஞ்சாச்சர சரண கோஷம் பாடுவர். இந்த ஒரு வார காலமும் சமைக்கப்பட்ட உணவைத் தவிர்த்து நீர் ஆகாரத்தை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்வர் சிவ பக்தர்கள்.
மகா சிவராத்திரியை ஒட்டிய சிவாலய ஓட்டம் கன்னியாகுமரியின் முன்சிறை மகாதேவர் சிவன் கோவிலில் நேற்று தொடங்கியது. கைகளில் விசிறியையும் விபூதியுடன் கூடிய பொட்டலத்தையும் கைகளில் ஏந்தியபடி முன்சிறை மகாதேவர் சிவன் கோவிலில் தொடங்கிய ஓட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தின் முதன்மையான 12 சிவாலயங்களை நோக்கி பயணித்தது.

கன்னியாகுமரியின் 12 சிவாலயங்களையும் ஓட்டமும் நடையுமாக சென்று பக்தர்கள் வழிபடுவதுதான் சிவாலய ஓட்டம். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திக்குறிச்சி மகாதேவர், திற்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், பன்னிப்பாகம் கிராத மூர்த்தி கோவில், கல்குளம் நீலகண்டேஸ்வரர் கோவில், மேலாங்கோடு காலகாலர் கோவில், திருவிடைக்காடு சடையப்பர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் ஆலயம், திருப்பன்றிகோடு பருதிபாணி மகாதேவர் கோவில் வழியாக நட்டாலம் சங்கர நாராயணன் கோவிலில் இந்த சிவாலய ஓட்டம் நிறைவடைகிறது. மொத்தம் 110 கிமீ தொலைவு, ஓட்டமும் நடையுமாக சென்று சிவாலயங்களில் பக்தர்கள் வழிபடுகின்றனர்.இன்றும் இருசக்கர வாகனங்கள், கார்களில் சென்று 12 சிவாலயங்களையும் காலை முதலே பக்தர்கள் வழிபட்டும் வருகின்றனர்.
சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று உள்ளூர் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவாலய ஓட்டம் ஏன்?
கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே நடைபெறக் கூடிய இந்த சிவாலய ஓட்டத்துக்கு புராண கதைகள் உள்ளன. மகாபாரத யுத்தம் முடிந்த பின்னர் தருமர் யாகம் செய்ய விரும்பினாராம்; அப்போது யாகத்துக்கான புருஷா மிருகத்தின் பாலை தேடி பீமன் புறப்பட்டாராம். பீமனிடம் பகவான் கிருஷ்ணன், புருஷா மிருகத்தை தேடிச் செல்லும் போது; தாம் கொடுக்கும் உருத்திராட்சங்களை கீழே வைத்தால் அது சிவலிங்கமாக உருமாறும்; புருஷா மிருகம், சிவலங்கங்களை பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்யும்; அப்போது புருஷா மிருகத்தின் பாலை கறந்துவிடலாம் என ஆலோசனை தந்தாராம். இதன்படியே புருஷா மிருகம் துரத்த ஒவ்வொரு உருத்திராட்சத்தையும் பீமன் கீழே வைக்க சிவலிங்கமாக உருமாறினவாம். இந்த சிவலிங்கங்கள் உருவான இடங்களே கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற 12 சிவாலயங்களாக வழிபடப்படுகின்றன. இந்த 12 சிவாலயங்களையும் ஒருசேர தரிசிக்கும் வகையில் சிவாலய ஓட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications