நாகர்கோவில்: நிதி விவகாரத்தில் நாம் தமிழர் நிர்வாகிகளிடையே மோதல்- மண்டை உடைப்பு-18 பேர் மீது வழக்கு!
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் கட்சி நிதி விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடையே பெரும் மோதல் ஏற்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இம்மோதல்கள் தொடர்பாக 18 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியானது பொதுமக்களிடம் நிதி வசூலித்து நிகழ்ச்சிகளை நடத்துவதாக தெரிவித்துக் கொள்கிறது. வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்களும் நாம் தமிழர் கட்சிக்கு பெருமளவு நிதி அளிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிதி விவகாரத்தில் ஏராளமான சர்ச்சைகள் உள்ளன. நாம் தமிழர் கட்சி தலைமை தொடங்கி கீழ்நிலை வரை இந்த சர்ச்சை நீள்கிறது.

இந்நிலையில் நாகர்கோவில் நாம் தமிழர் கட்சியின் 26-வது வார்டு செயலாளர் ஹரிஹர செல்வம், நாகர்கோவில் தொகுதி பொருளாளர் மேல காமராஜர்புரம் சதீஷ்குமார் இருவரும் கும்பல் ஒன்றினால் சுற்றி வளைக்கப்பட்டு சரமாரியாக தாக்கப்பட்டனர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இருவரும் ரத்த வெள்ளத்தில் மிதந்த நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஹரிஹர செல்வம் கொடுத்த புகாரில், நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் பெர்லின் ஜோ உள்ளிட்ட 18 பேர் சேர்க்கப்பட்டிருந்தனர். நாம் தமிழர் கட்சியின் வரவு செலவு கணக்கு விவரங்களில்தான் தாங்கள் தாக்கப்பட்டதாகவும் ஹரிஹர செல்வம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 18 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.













Click it and Unblock the Notifications