திமுக மேயருக்கு கொலை மிரட்டல் விடுத்த காங்கிரஸ் கவுன்சிலர்.. போலீஸ் வலைவீச்சு.. நாகர்கோவிலில் பரபர!
கன்னியாகுமரி: நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷுக்கு கொலை மிரட்டல் விடுத்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் நவீனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மேயராக இருப்பவர் மகேஷ். இவர் கன்னியாகுமரி மாவட்ட திமுக கிழக்கு மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் மேயர் மகேஷ் நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், 44வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் நவீன் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு நாகர்கோவிலில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் தனது வாகனத்தில் இருந்த போது, காங்கிரஸ் கவுன்சிலர் நவீன் கார் மூலம் தன்னை இடிக்க முயன்றதாகவும், அதை தனது உதவியாளர் கேட்டபோது கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார் மகேஷ்.
இந்த புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் காங்கிரஸ் கவுன்சிலர் நவீன் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் நவீனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கூட்டணி கட்சியை சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் மேயருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாநகராட்சி மேயருக்கு எதிராக சொந்தக் கட்சி கவுன்சிலர்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து பின்னர், வாக்கெடுப்புக்கு வராமல் சுற்றுலா சென்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications