சர்ர் புர்ர்ன்னு கிறிஸ்துமஸ் இரவில் ரேஸிங்கில் ஈடுபட்டால் கைது உறுதி.. எச்சரித்த காவல்துறை!
கன்னியாகுமரி: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பைக் ரேஸில் ஈடுபட்டால், அவர்கள் மீது வழக்கு பதிந்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை உள்பட பல்வேறு நகரங்களிலும், இரவு நேரத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் பைக் ரேஸ் என்ற பெயரில் சாகசத்தில் ஈடுபடுவோரின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட நாட்களில், அதிகமானோர் இந்த செயல்களில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில், ரேஸிங்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குற்ற நடவடிக்கைகளை தடுக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினாலோ அல்லது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசத்தில் (Racing) ஈடுபட்டாலோ அவர்கள் மீது வழக்கு பதிந்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களின் ஓட்டுனர் உரிமமும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் ஐபிஎஸ் எச்சரித்துள்ளார்.

பொதுமக்களின் உயிருக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு நபர்கள் சென்ற மாதம் மாவட்ட காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வரக்கூடிய பண்டிகை நாட்களை பாதுகாப்பான முறையில் கொண்டாடி மகிழ்ந்திட பெதுமக்கள் அனைவரையும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications