கேப்டனை முதுகில் குத்திட்டாங்க.. "அவர்கள்" மட்டும் கூட இருந்திருந்தால்.. குமரியில் பிரேமலதா பேச்சு
கன்னியாகுமரி: கேப்டன் விஜயகாந்த் எல்லாரையும் நம்பினார் அவர் முதுகில் குத்திட்டாங்க என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மிகவும் ஆதங்கத்துடன் பேசியிருந்தார்.
கன்னியாகுமரியில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பதாவது: இங்கு இத்தனை கூட்டம் கூடியுள்ளனர்.
இவர்கள் எல்லாம் காசுக்காகவும் குவார்ட்டர் பிரியாணிக்காகவும் கூடியவர்கள் அல்ல. தானா சேர்ந்த கூட்டம். இப்படி எதையும் எதிர்பார்க்காமல் தானாக வந்து கூடுவது தேமுதிகவுக்கு மட்டும்தான். நாம் ஆளும் கட்சியும் இல்லை. ஆண்ட கட்சியும் இல்லை.

கேப்டன் மீது பாசம்
ஆனால் இந்த கூட்டத்தை பார்க்கும் போது கேப்டன் மீது வைத்துள்ள பாசத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எதிர்க்கட்சியாக இருந்தோம். ஆனால் எல்லாவரும் நமக்கு துரோகம் இழைத்தார்கள். கேப்டன் விஜயகாந்தின் முதுகில் குத்திவிட்டு போய்விட்டார்கள். அவர்கள் மட்டும் கேப்டனுடன் பக்கபலமாக இருந்திருக்கலாம்.

கேப்டனின் உடல்நிலை
அப்படி இருந்திருந்தால் கேப்டனின் உடல்நிலைக்கு எதுவும் ஆகியிருக்காது. இந்த கட்சியையும் யாரும் தொட்டு பார்த்திருக்க முடிந்திருக்காது. கேப்டன் நல்லவர், குழந்தை மாதிரி, எல்லாரையும் நம்பினார், ஆனால் முதுகில் குத்திட்டாங்க. அப்படி துரோகம் செய்தவர்கள் யாருமே இன்று நன்றாக இல்லை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா
சட்டசபையில் வைத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கேப்டன் குறித்து என்னலாம் பேசினாங்க. நான் எதையுமே மறக்கவில்லை. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 2011 இல் நடந்த சட்டசபைத் தேர்தலில் வென்றோம். அப்போது எதிர்க்கட்சி தலைவராக கேப்டன் விஜயகாந்த் இருந்தார். அந்த நேரம் ஆளும் அதிமுக, பால் விலை, பஸ் கட்டணத்தை உயர்த்தியது.

கூட்டணி கட்சி
இதை கூட்டணி கட்சி என்றும் பாராமல் விஜயகாந்த், சட்டசபையில் தட்டிக் கேட்டார். அதற்கு ஜெயலலிதா நம் கேப்டனை பார்த்து இனி மேல் உங்களுக்கு இறங்கு முகம்தான் என சொன்னார். கேப்டனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. தேர்தல் தோல்வி எல்லாம் உண்மைதான் என்றாலும் கேப்டன் இன்றைக்கும் சிங்கம் போல் இருக்கிறார்.

பெருசா சாபம்
பெருசா சாபம் விட்ட நீங்க (ஜெயலலிதா) 68 வயதிலேயே கடவுளிடம் போய் சேர்ந்துவிட்டீர்கள். ஆனால் கேப்டன் யாரையும் சபிக்கவில்லை. யாரையும் விரோதியாக பார்க்கவில்லை. இவ்வாறு பிரேமலதா பேசியுள்ளார். பொதுவாக இறந்தவர்கள் குறித்து பேசக் கூடாது என்பார்கள். அதாவது அவர்கள் குறித்த நல்லதை மட்டும் பேச வேண்டும். அவர்கள் இந்த கெடுதல் செய்தார்கள், அந்த துரோகம் செய்தார்கள் என பேசுதல் அர்த்தமற்றது, காலம் கடந்தது என்பார்கள். அப்படியிருக்கும் போது ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கத்தை கட்டி காத்தவரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா தேமுதிகவுக்கு சாபம் விட்டு அவர் சீக்கிரமே இறந்துவிட்டார் என பிரேமலதா கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "எங்களுக்கு நீ சாபம் விட்ட, அதனால் சாமிகிட்ட போய்ட்டே" என பேசுவது எந்த மாதிரியான அரசியல் என்றே தெரியவில்லை என சமூகஆர்வலர்கள் பெரும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications