பாஜக ஆட்சியை வீழ்த்த தமிழகத்தில் பிள்ளையார்சுழி போடும் ராகுல்! குமரி டூ காஷ்மீர்! 150 நாள் பயணம்!
கன்னியாகுமரி: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சியை வீழ்த்த வரும் செப்டம்பர் மாதம் தமிழகத்தில் பிள்ளையார்சுழி போடுகிறார் ராகுல்காந்தி.
கன்னியாகுமரியில் தொடங்கும் ராகுல்காந்தியின் மக்கள் சந்திப்பு நடைபயணமானது காஷ்மீரில் நிறைவு செய்யும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
சுமார் 3,500-க்கும் மேற்பட்ட கிலோமீட்டர்களை 150 நாள் வரை ராகுல் மக்கள் சந்திப்பு பயணம் நடத்தவிருக்கிறார்.
பீகார்:7 கட்சிகளின் 164 எம்எல்ஏக்கள் ஆதரவு-ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிதிஷ்குமார் அறிவிப்பு
நாடாளுமன்றத் தேர்தல்
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில் இப்போதே தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை தொடங்குகிறார் ராகுல் காந்தி. நமக்கு நாமே புகழ் சுனில் கொடுத்த ஐடியா படி கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்கிறார். 2024 பொதுத்தேர்தலில் மத்திய பாஜக அரசை வீழ்த்துவதற்காக வரும் செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் பிள்ளையார்சுழி போடுகிறார் ராகுல்.
12 மாநிலங்கள்
முதற்கட்டமாக 12 மாநிலங்கள் வழியாக 150 நாட்களுக்கு இந்த பயணத்தை நடத்துகிறார் ராகுல்காந்தி. சுமார் 3,500 கிமீ தூரம் பயணம் செய்யும் வகையில் ராகுலுக்கு பயணத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளை காங்கிரஸ் மேல்மட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர். கன்னியாகுமரியை பொறுத்தவரை அது காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்வது கவனிக்கத்தக்கது. ராகுலின் தமிழக வருகை உறுதிச்செய்யப்பட்ட நிலையில் தேதி மட்டும் இன்னும் இறுதி செய்யப்படவில்லையாம்.
சுனில் டீம்
ராகுலின் இந்த பயணத்தால் கட்சியினருக்கு புது உற்சாகம் கிடைக்கும் என கணக்குப் போட்டிருக்கிறது சுனில் டீம். இதே சுனில் தான் கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது முதலமைச்சர் ஸ்டாலினை நமக்கு நாமே என்ற திட்டத்தை வகுத்துக் கொடுத்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வைத்தார். இப்போது அதே பார்முலாவை காங்கிரஸ் கட்சியிலும் ஒர்க் அவுட் செய்து வருகிறார்.
திருப்புமுனை
பாஜக ஆட்சிக்கு எதிராக கன்னியாகுமரியில் ராகுல் தொடங்கும் இந்தப் பயணம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. கடந்த கால தேர்தல்களில் ராகுல் முறையாக பிரச்சாரத்துக்கு செல்லவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த முறை அது போன்ற குற்றச்சாட்டுகளுக்கே இடமிருக்காது எனத் தெரிகிறது.