அமைச்சர் மனோ தங்கராஜை புறக்கணித்த ராகுல் காந்தி.. கன்னியாகுமரி மாவட்டத்தில் கசப்பான அனுபவம்
கன்னியாகுமரி: பொதுக்கூட்ட மேடையில் சால்வை அணிவிக்க சென்ற அமைச்சர் மனோ தங்கராஜை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி புறக்கணித்துவிட்டதாக வீடியா ஒன்று வெளியாகி உள்ளது. அமைச்சருக்கு சொந்த மாவட்ட மக்கள் (கன்னியாகுமரி) முன்னிலையில் கசப்பான அனுபவம் நேர்ந்துவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
இன்று கன்னியாகுமாரி மாவட்டத்தில் காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக குளச்சல் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை தொடங்கும் முன்பு கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் ராகுலுக்கு நினைவு பரிசுகள் மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அந்த நேரத்தில் மேடையில் சால்வையை கையில் வைத்து கொண்டு வரிசையில் நின்று கொண்டிருந்த அமைச்சர் மனோ தங்கராஜை ராகுல் கண்டுகொள்ளவே இல்லை. இந்நிலையில் ஒரு கட்டத்தில் தாமாக முன் வந்து அமைச்சர் மனோ தங்கராஜ் ராகுலுக்கு சால்வை அணிவிக்க முயன்ற போது அதனை ராகுல் காந்தி புறக்கணித்து விட்டு சென்றதாக அமைச்சரின் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.
தற்போது திமுகவில் போட்டியிட அமைச்சராக உள்ள மனோவிற்கு வாய்ப்பு அளிக்காமல் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இன்று ராகுல் காந்தி பொது மேடையில் மனோ தங்கராஜ் சால்வை போட முயன்ற போது மறுத்து விட்டு சென்ற சம்பவம் அவருக்கு கசப்பான அனுபவத்தை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.
மனோ தங்கராஜூக்கு ஏன் தேர்தலில் வாய்ப்பு கிடைக்கவில்லை
2026 சட்டசபை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் கடந்த மார்ச் 28ம் தேதி வெளியானது. இதில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜின் பெயர் விடுபட்டது அரசியல் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கான காரணங்களாக அரசியல் விமர்சகர்கள் மற்றும் உளவுத்துறை வட்டாரங்கள் முன்வைக்கும்ம் சில தகவல்களை பார்ப்போம். மனோ தங்கராஜ் வெற்றி பெற்று வந்த பத்மநாபபுரம் தொகுதி, இந்த முறை கூட்டணி கட்சியான காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்டது. திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட சில தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்ததில், இவருடைய தொகுதியும் ஒன்றாக அமைந்தது. அதுவே இவரதுவாய்ப்பு பறிபோக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது,
அடுத்ததாக கட்சித் தலைமைக்கு வந்த சில புகார்கள் முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமவளக் கடத்தல் தொடர்பாக எழுந்த புகார்களில் இவருடைய பெயரை பாஜகவினர் கடுமையாக குற்றம்சாட்டி வந்தார்கள். மனோ தங்கராஜ் மறுத்த போதிலும், பாஜகவினரால் கடுமையாக பல்வேறு விஷயங்களுக்கு விமர்சிக்கப்பட்டார். அடுத்தாக ஆவின் மற்றும் பால்வளத் துறையில் நிர்வாக ரீதியான சில சலுகைகள் மற்றும் முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதனால் 2024 செப்டம்பரில் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டு, மீண்டும் 2025 ஏப்ரலில் அமைச்சராகப் பொறுப்பேற்றார். எனினும் ஸ்டாலின் அவருக்கு இந்த தேர்தலில் வாய்ப்பளிக்கவில்லை. கூட்டணி கணக்கு மற்றும் நிர்வாக ரீதியான புகார்கள் ஆகிய இரண்டும் சேர்ந்துதான் மனோ தங்கராஜின் வாய்ப்பைப் பறித்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications