கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ்.யு.எஸ். நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்களுக்கு நல்ல செய்தி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ்.யு.எஸ். நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் பணத்தை திரும்பப்பெற பொருளாதார குற்றப்பிரிவை அணுகலாம் என்று கன்னியாகுமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பர்னபாஸ் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பர்னபாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், மண்டைக்காடு, மணவாளக்குறிச்சி, திங்கள்நகர், கருங்கல், தக்கலை, மார்த்தாண்டம், குலசேகரம், நாகராஜா கோவில், மீனாட்சிபுரம், பத்மநாபபுரம், திருவிதாங்கோடு, சாமியார்மடம் ஆகிய பகுதிகளில் எஸ்.யு.எஸ். என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்ததது. இந்த நிறுவனம் மீது நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மதுரையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் சொத்துக்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டு கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அதிகாரி மூலம் ஏலம் விடப்பட்டு கோர்ட்டு உத்தரவுப்படி முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு பணத்தில் 24 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே எஸ்.யு.எஸ். நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்கள் நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் ஆஜராகி நிவாரணம் பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதலீட்டாளர்கள் இறந்து விட்டால் சம்பந்தப்பட்டவர்கள் வாரிசு சான்றிதழ் கொண்டுவர வேண்டும்.
இதேபோல் உண்ணாமலைக்கடையில் இயங்கி வந்த அன்சிகா ஹோல்சேல் மார் என்ற நிதி நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக ஆனந்தராஜன், அரவிந்தராஜன், அரனீஷ் ராஜன், சுந்தரராஜன், அனீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனவே இந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்த நபர்கள் நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரடியாக வந்து புகார் மனு கொடுக்கும்படி ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுவரையிலும் புகார் மனு கொடுக்காதவர்கள் நேரடியாக தகுந்த ஆவணங்களுடன் வந்து புகார் மனு அளிக்கும்படியும், 30-ந் தேதி வரை கிடைக்கப்பெறும் மனுக்கள் பரிசீலனை செய்து இந்த வழக்கின் சாட்சி பட்டியலில் சேர்த்து குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதுபோன்ற அதிக வட்டி தருவதாகவும், நிலம் தருவதாகவும், பணம் இரட்டிப்பாக தருவதாகவும் கூறும் தனியார் நிதி நிறுவனங்களில் யாரும் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்றும், ஆர்.பி.ஐ. அனுமதி பெற்ற தனியார் வங்கிகள் மற்றும் அரசு வங்கிகளில் முதலீடு செய்து பணத்தை பாதுகாத்துக் கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications