SIR.. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே 1.53 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்க வாய்ப்பு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் 1.53 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி 1-1-2026-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியாகும் இளம் வாக்காளர்கள், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காத வாக்காளர்கள், புதிதாக திருமணமாகி இடம் பெயர்ந்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அந்த வகையில் புதிதாக 19,175 பேர் வாக்காளர்களாக வாய்ப்பு உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி தமிழகம் முழுவதும் SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை 15 லட்சத்து 92 ஆயிரத்து 872 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளதால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் படிவங்களை வீட்டுக்கு நேரில் சென்று அலுவலர்கள் வழங்கினர்.

பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் திரும்ப பெறப்பட்டு மின்னணு மயமாக்கும் பணிகளும் தற்போது நிறைவடைந்து விட்டது. இதில் 14 லட்சத்து 39 ஆயிரத்து 471 வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினர். எனவே அவர்களது பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற உள்ளது.
அதே சமயம் கணக்கீட்டு படிவங்களை 1 லட்சத்து 53 ஆயிரத்து 401 பேர் திரும்ப வழங்கவில்லை. இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 953 ஆகும். இருப்பிடத்தில் வசிக்காதவர்கள் 8 ஆயிரத்து 528 பேர் ஆவார். நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் எண்ணிக்கை 75 ஆயிரத்து 851 என்று கூறப்படுகிறது.. 11 ஆயிரத்து 822 பெயர்கள் இருமுறை இடம்பெற்று இருந்ததை முகவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதர இனங்கள் 247 ஆகும். மொத்தத்தில் 9.63 சதவீத கணக்கீட்டு படிவங்கள் திரும்ப வரவில்லை என்பது தெரியவந்துள்ளது.
தற்போது கணக்கீட்டு படிவங்களை திரும்ப ஒப்படைக்கும் காலக்கெடு முடிவடைந்துவிட்டது. எனவே இதுவரை கணக்கீட்டு படிவம் திரும்பப் பெறாத 1 லட்சத்து 53 ஆயிரத்து 401 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கணக்கீட்டு படிவம் திரும்ப வழங்கிய 14 லட்சத்து 39 ஆயிரத்து 471 பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 19-ந்தேதி வெளியிடப்பட இருக்கிறது.
இதனிடையே இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி 1-1-2026-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியாகும் இளம் வாக்காளர்கள், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காத வாக்காளர்கள், புதிதாக திருமணமாகி இடம் பெயர்ந்தவர்கள், நிரந்தரமாக குடிபெயர்ந்த வாக்காளர்கள் தங்கள் பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு முகாம் 1,914 வாக்குச்சாவடிகளிலும் கடந்த 13, 14 ஆகிய 2 நாட்கள் நடந்தது.
முகாம்களில் இளம் வாக்காளர்கள் ஆர்வமாக வந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கினார்கள். இதனால் முகாம்களில் இளம் வாக்காளர்கள் வருகை தந்து வாக்காளர்களாக பதிவு செய்தனர். அந்த வகையில் புதிதாக பெயர் சேர்க்க மொத்தம் 19 ஆயிரத்து 175 பேர் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வழங்கினர். கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் 3,027 பேரும், நாகர்கோவில் தொகுதியில் 2,834 பேரும், குளச்சல் தொகுதியில் 2,647 பேரும், பத்மநாபபுரம் தொகுதியில் 2,365 பேரும், விளவங்கோடு தொகுதியில் 3,617 பேரும், கிள்ளியூர் தொகுதியில் 4,685 பேரும் வழங்கி உள்ளனர். இதே போல திருத்த படிவம் 8-ஐ நாகர்கோவில் தொகுதியில் 60 பேர் வழங்கி இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications