கிறிஸ்துமஸ் தினத்தன்று கன்னியாகுமரி வருகிறார் ஜனாதிபதி... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
கன்னியாகுமரி: விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் 25-ம் தேதி கன்னியாகுமரி வருகிறார்.
குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், 25-ம் தேதி இரவு கன்னியாகுமரியில் தங்கும் அவர் 26-ம் தேதி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதி
விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா வரும் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று கன்னியாகுமரியில் நடைபெறுகிறது. அதில் பங்கேற்பதற்காக டெல்லியிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குமரிக்கு வருகிறார்.
2 நாள் பயணம்
கன்னியாகுமரியில் 25-ம் தேதி நிகழ்ச்சியை முடித்துவிட்டு அரசு விருந்தினர் மாளிகையில் அன்றிரவு தங்கும் ராம்நாத் கோவிந்த், அடுத்தநாள் 26-ம் தேதி காலை மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்யவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
கண்காணிப்பு
குடியரசுத் தலைவரின் மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் இன்றே கன்னியாகுமரிக்கு வந்துவிட்டனர். ராம்நாத் கோவிந்த் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைஎறும் இடம், தங்கக்கூடிய இடங்களில் அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களுக்கான உதவியை மாவட்ட எஸ்.பி, ஸ்ரீநாத் செய்துகொடுத்து வருகிறார்.
விவேகானந்தர் மண்டபம்
இதனிடையே விவேகானந்தர் நினைவு மண்டபத்தை ஜனாதிபதி பார்வையிட உள்ளதால் சுற்றுலாப்பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் குமரிக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பது குறிப்பிடத்தக்கது.