கன்னியாகுமரியில் திருட போன வீட்டில் பேண்டை கழற்றி.. லேடீஸ் உடை அணிந்த திருடன்.. படுக்கையில் ட்விஸ்ட்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கோடிமுனை மீனவ கிராமத்தைச் சேர்ந்த பிராங்க்ளின் என்பவர் கேரளாவில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இதனால் வீட்டை பூட்டி விட்டு அவரது மனைவி மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்று விடுவார். இவரது வீட்டிற்கு திருட வந்த திருடன், மெத்தையைப் பார்த்ததும் திருட வந்ததை மறந்து ஆளில்லாத வீட்டில் அசந்து தூங்கியுள்ளார். இறுதியில் போலீசாரிடம் சிக்கியிருக்கிறார்.
சில திருடர்கள் விசித்திரமானவர்களாக இருக்கிறார்கள். திருட வந்த இடத்திலேயே தூங்குவது, மது அருந்துவது, சாப்பிடுவது போன்ற சேட்டைகளை செய்கிறார்கள். அப்படி திருட வந்த இடத்தில் படுக்கையில் தூங்கியவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் சிக்கியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கோடிமுனை மீனவ கிராமத்தைச் சேர்ந்த 60 வயதாகும் பிராங்க்ளின் என்பவர் கேரளாவில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இதனால் வீட்டை பூட்டி விட்டு அவரது மனைவி மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்று விடுவாராம் அப்படித்தான் அண்மையில் போய்விட்டார்..
ஆனால் பிராங்க்ளின் வீட்டின் மாடியில் இருந்த குடிநீர் தொட்டி நிரம்பி உபரி நீர் பக்கத்து வீட்டின் முன்பு விழுந்து கொண்டிருந்தது. மேலும் வீட்டின் அறைகளில் மின் விளக்குகள் எரிந்து கொண்டே இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டினர் இது குறித்து மணவாளக்குறிச்சி பகுதியில் வசித்துவரும் பிராங்க்ளின் மகள் ஸ்டெபி கிராப்புக்கு தகவல் கொடுத்தார். உடனே அவர் விரைந்து வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் கதவுகள் திறந்து கிடந்தன. குடிநீர் தொட்டிக்கான மின்மோட்டாரும் ஓடிக்கொண்டிருந்தது. மேலும் பீரோவில் இருந்த ₹3 ஆயிரம் மதிப்புள்ள 2 பட்டுப்புடவைகள், ₹1,000 ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர் திருடிச்சென்றதும் தெரியவந்தது.
பின்னர் இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்தார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது திருடிய மர்மநபரின் உருவம் பதிவாகியிருந்தது. போலீசார் விசாரித்த போது, பிராங்க்ளின் வீட்டில் புகுந்து பணம், பட்டு புடவைகளை திருடியது குளச்சல் துறைமுகத்தெரு பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய பிரவின் (38) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது தான் தகவல்கள் தெரியவந்தது. ஆரோக்கிய பிரவின் சம்பவத்தன்று அதிகாலை கோடிமுனை மீனவ கிராமத்தில் புகுந்து வீடுகளின் முன்பு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கருவாடுகளை திருடி தின்றுள்ளார். பின்னர் ஆள் இல்லாததை நோட்டமிட்ட அவர் பிராங்க்ளின் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மின் விசிறியை போட்டிருக்கிறார். அங்கு மெத்தையைப் பார்த்ததும் அசந்து தூங்கியுள்ளார்.
அதே சமயத்தில் மின் விசிறிக்கான சுவிட்சை போட்டபோது, குடிநீர் தொட்டிக்கான மோட்டார் சுவிட்சையும் போட்டிருக்கிறார்.. இது தான் ஒரு கட்டத்தில், குடிநீர் தொட்டி நிரம்பி உபரி தண்ணீர் பக்கத்து வீட்டின் வளாகத்தில் பாய்ந்திருக்கிறது.
இந்த சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்த ஆரோக்கிய பிரவின், திருட வந்த இடத்தில் அதை மறந்து தூங்கி விட்டோமே என நினைத்தார். பின்னர் வீட்டின் பீரோவில் இருந்த 2 பட்டு புடவைகள், ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடி விட்டு, தான் அணிந்து வந்த பேண்டை கழற்றி போட்டு விட்டு வீட்டில் இருந்த லேடீஸ் ஜீன்ஸ் பேண்டையும் எடுத்து அணிந்தபடி கட்டப் பையுடன் தப்பி இருக்கிறார். இந்த தகவல் விசாரணையில் தெரியவந்தது.. இதையடுத்து ஆரோக்கிய பிரவினை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 2 பட்டு புடவைகளையும் பறிமுதல் செய்தனர். இந்த திருட்டு சம்பந்தமான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications