கல்யாண நாள் அதுவுமா.. யார் அந்த 3 பேர்.. 3 நாட்கள் தொடர் நோட்டம்.. கலக்கத்தில் குமரி பெண்கள்
கன்னியாகுமரியில் பிச்சை கேட்பது போல வந்து கொள்ளை அடித்துள்ளனர்
கன்னியாகுமரி: யாசகம் கேட்பது போல வந்த 3 பேர், வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்து விட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை குமரியில் ஏற்படுத்தி வருகிறது.
மண்டைக்காட்டை அடுத்துள்ள பகுதி மணலிவிளை.. இங்கு வசித்து வருபவர் பிரதீஷ்குமார்... வெளிநாட்டு சரக்கு கப்பலில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பெயர் ஸ்ரீஜா ஷாமிலி.
கடந்த 2019, டிசம்பர் 1-ல் இவர்களின் திருமணம் நடந்துள்ளது.. இவர்களுக்கு 6 மாதத்தில் குழந்தை உள்ளது.. நேற்று டிசம்பர் 1, திருமண நாள் என்பதால், அதை கொண்டாடுவதற்காக வெளிநாட்டில் இருந்து 2 மாதத்துக்கு முன்புதான் சொந்த ஊர் திரும்பினார்.
ஆஸ்பத்திரி
இந்நிலையில், தன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்பதால், அவரை அழைத்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார் பிரகதீஷ்.. வீட்டில் ஸ்ரீஷா மட்டும் கைக்குழந்தையுடன் இருந்துள்ளார்.. கணவரின் தங்கை பிரதி என்பவருடன் போனில் பேசிக் கொண்டிருந்தார்.. அப்போது வீட்டின் முன்பு 2 ஆண்களும், ஒரு பெண்ணும் வந்தனர்.. 3 பேரும் ஸ்ரீஜாவிடம் பிச்சை கேட்டுள்ளனர். ஆனால், ஸ்ரீஜா அவர்களுக்கு பிச்சை போட மறுத்துள்ளார்.
கதவு
அத்துடன், 3 நாட்களாகவே யாரோ 3 பேர் பிச்சை எடுத்து கொண்டு இந்த பக்கமாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்று பிரதியிடம் போனில் ஸ்ரீஜா சொல்லி உள்ளார்.. இதை கேட்டு உஷாரான பிரதி, கதவை உள்பக்கமாக பூட்டிக் கொள்ளுமாறு அண்ணியிடம் அறிவுறுத்தி உள்ளார்.. ஸ்ரீஜாவோ, முன்பக்க கதவை பூட்டியுள்ளார். ஆனால், சுதாகரித்து கொண்ட மர்ம கும்பல் பின்பக்க கதவு வழியாக வீட்டினுள் உள்ளே புகுந்துவிட்டது.. கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்ரீஜா ஷாமிலி முகத்தில் மயக்க மருந்து பொடியையும் வீசியுள்ளது.
கொள்ளை
இதில் மயங்கி விழுந்த ஸ்ரீஜாவிடமிருந்து, தாலி சங்கிலி, வளையல், கம்மல் போன்றவற்றை கழற்றி கொண்டது.. அத்துடன் பீரோவில் இருந்த 10 லட்சம் மதிப்புள்ள, 25 சவரன் நகைகளையும் கொள்ளையடித்தது.. பிறகு, ஸ்ரீஜாவையும், கைக்குழந்தையையும் ஒரு ரூமில் வைத்து பூட்டி விட்டு அந்த கும்பல் தப்பி சென்றுள்ளது. இதனிடையே, பேசிக் கொண்டிருந்த அண்ணியின் செல்போன் கனெக்ஷன் திடீரென துண்டிக்கப்பட்டதால், பிரதி பதற்றமடைந்தார்..
ரூம் கதவு
அதனால், உடனடியாக தன்னுடைய கணவருடன் அங்கு வந்து பார்த்தார்.. பூட்டப்பட்டிருந்த ரூம் கதவை திறந்து பார்த்தபோது ஸ்ரீஜா, கட்டிலில் கைக்குழந்தையுடன் மயக்க நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ந்து உள்ளார்.. உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.. அத்துடன் மண்டைக்காடு போலீசாருக்கும் தகவல் தந்தனர்.. போலீசாரும் மருத்துவமனைக்கு சென்று, ஸ்ரீஜா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்..
கைரேகைகள்
இதையடுத்து உடனடியாக அந்த திருட்டு கும்பலை பிடிக்க தயாரானது போலீஸ்.. 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தள்ளனர்.. அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்ற ஆய்வும் நடந்து கொண்டிருக்கிறது. கொள்ளையடிக்க வந்த 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணுக்கு எத்தனை வயது இருக்கும், முகமூடி அணிந்திருந்தார்களா? என்ற விசாரணை அந்த பகுதியில் தொடர்கிறது..
சந்தேகம்
இதுகுறித்து டிஎஸ்பி தங்கராமன் சொல்லும்போது, "இந்த 3 நாட்களாகவே சந்தேகப்படும்படியான 3-பேர் கொண்ட மர்ம கும்பல் ஸ்ரீஜா ஷாமிலியிடம் யாசகம் கேட்பதுபோல், வீட்டை கண்காணித்து நோட்டமிட்டு வந்திருக்கிறார்கள்.. சந்தேகம் வந்தபிறகுகூட, அவசர போலீஸ் எண்ணுக்கோ, போலீஸ் ஸ்டேஷனுக்கோ தகவல் தரவில்லை.. அதனால்தான் அந்த கும்பல் கச்சிதமாக கொள்ளையை அரங்கேற்றி சென்றுள்ளது.. சந்தேகப் படும்படியான தெரியாத நபர்கள் தொடர்ந்து வீட்டிற்கு வந்தால் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.. அவ்வாறு தெரிவித்தால் இது போன்ற கொள்ளை சம்பவங்களை தவிர்க்கலாம்" என்றார்.