உரிமை காப்பதற்கு உதயசூரியன் அவசியம் ; உயிரை காப்பதற்கு மாஸ்க் அவசியம்.. ஸ்டாலின் செம பஞ்ச்!
கன்னியாகுமரி: உரிமையை காப்பதற்கு உதயசூரியன்; உயிரை காப்பதற்கு மாஸ்க் அவசியம். எனவே மாஸ்க் அணியுங்கள். தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழகம் முழுவதும் கொளுத்தும் கோடை வெயிலுக்கு மத்தியிலும் அரசியல் கட்சி தலைவர்கள் வாக்குகளை அறுவடை செய்வதற்காக தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

ஸ்டாலின் பிரசாரம்
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும், மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தை ஆதரித்தும் ஆரல்வாய்மொழியில் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் விரோத திட்டங்கள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி கன்னியாகுமரி மாவட்டத்துக்கும், தமிழக மக்களுக்கும் எதுவும் செய்யவில்லை. ஏன் அவரது சொந்த தொகுதியான எடப்பாடி மக்களுக்கே எதுவும் செய்யாதவர். நான் எட்டப்பாடியில் பிரசாரம் செய்தபோது மக்களின் கோபம் எனக்கு நன்றாக தெரிந்தது.மத்திய அரசின் உதவியுடன் தமிழகத்தில் மக்கள் விரோத திட்டங்களை முதல்வர் கொண்டு வருகிறார். கன்னியாகுமரி அருகே கோவளத்தில் சரக்கு பெட்டக முனையம் துறைமுகம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

சரக்கு பெட்டக துறைமுகம் வர விடமாட்டோம்
இதற்கு டெண்டர் விளம்பரமும் கொடுத்துள்ளனர். ஆனால் இதற்கு ஆதரவு கொடுத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பாஜகவும் தற்போது தேர்தலுக்காக சரக்கு பெட்டக துறைமுகம் அமையாது என்று நாடகமாடுகிறார்கள்.இவர்கள் இருவரையும் நம்பாதீர்கள். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் கன்னியாகுமரி அருகே கோவளத்தில் சரக்கு பெட்டக முனையம் அமைவது தடுக்கப்படும். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால் மோடி வாக்குறுதி அளித்து 7 ஆண்டுகளாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கண்டிப்பாக மாஸ்க் போடுங்கள்
கன்னியாகுமரி தொகுதியில் இருமுறை எம்.பி.யாக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் இந்த தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. அவர் இந்த முறையும் தோல்வியை சந்திப்பார் என்பது உறுதி. திமுக சார்பில் 505 வாக்குறுதிகள் கொடுத்துள்ளோம், திமுக ஆட்சிக்கு வந்ததும் இவை அனைத்தும் நிறைவேற்றப்படும். கொரோனாவின் இரண்டாவது அலை தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. எனவே இதுபோல் கூட்டமாக இருக்கும் இடங்களில் மாஸ்க் கண்டிப்பாக போட வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.நமது வேட்பாளர்களும் மாஸ்க் போடவில்லை.

உரிமை காக்க உதயசூரியன்
ஏன் நானும் மாஸ்க் போடவில்லை. நான் சமுக இடைவெளி தூரத்தில் உள்ளதால் மாஸ்க் போடவில்லை. ஆனால் கூட்டமாக இருக்கும்போது தயவு செய்து மாஸ்க் போடுங்கள். நமக்கு உயிர் முக்கியம். உரிமையை காப்பதற்கு உதயசூரியன்; உயிரை காப்பதற்கு மாஸ்க் அவசியம். எனவே மாஸ்க் அணியுங்கள். தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். நானும் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். தடுப்பூசி கண்டு பயம் வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications