கனிம வள கனரக வாகனங்களால் கலங்கும் கன்னியாகுமரி.. காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் அதிரடி முடிவு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவை நோக்கி செல்லும் கனிம லாரிகளால் பெரிய அளவில் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே தடை செய்யப்பட்ட நேரத்தில் இயங்கும் கனரக வாகனங்களை காங்கிரசார் சிறை பிடிப்பார்கள் என விஜய்வசந்த் எம்.பி. எச்சரித்துள்ளார்.
கன்னியாகுமரி தொகுதி எம்பியான விஜய் வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் கனரக வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே இவற்றின் போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்களின் இந்த கோரிக்கையை கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரிடம் எடுத்து கூறி கனரக வாகனங்களுக்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மட்டும் இயங்க அனுமதித்து கட்டுப்பாடு ஏற்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டிருந்தேன்.
அதன்படி கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 3 முதல் இரவு 8 மணி வரையிலும் கனரக வாகனங்கள் இயங்க கூடாது என உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஆனால் அவை கடந்த சில நாட்களாக தடை செய்யப்பட்ட நேரத்தில் விதிகளை மீறி சாலையில் கனரக வாகனங்கள் இயங்குவது தெரிய வந்துள்ளது.
எனவே, போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் இதனை கண்காணித்து இந்த வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சியினர் தடையை மீறி சாலையில் இயங்கும் கனரக வாகனங்களை பொதுமக்களுடன் இணைந்து சிறை பிடிப்போம் என்பதை தெரிவித்து கொள்கிறேன்" இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் வசந்த்தால் கூறப்பட்டுள்ளது.
என்ன பிரச்சனை: கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு கனிம வளங்கள் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் எண்ணிக்கை கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு உள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் களியலில் தொடங்கி ஆரல்வாய்மொழி வரை மேற்கு தொடர்ச்சிமலை அடிவார பகுதிகளில் கடந்த 2013-ம் ஆண்டு வரை ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வந்தன. அதன்பின், மேற்குதொடர்ச்சி மலையை பாதுகாக்கும் வகையில் உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவின் அனுமதியுடன் சில குவாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் சிலர் கனிம வளங்களை தாராளமாக வெட்டிஎடுத்து, டாரஸ் லாரிகளில் பலமடங்கு பாரம் ஏற்றப்பட்டு கல், ஜல்லி, பாறை பொடியை கேரளாவுக்கு கொண்டு சென்றதாக அப்போது புகார் எழுந்தது. சுங்காங்கடை, குலசேகரம், அருமனை, ஆரல்வாய்மொழி போன்ற பகுதிகளில் இருந்து 24 மணி நேரமும் கனிமவளங்கள் கேரளா கொண்டு செல்லப்பட்டதாக கடந்த அதிமுக ஆட்சியில் புகார்கள் எழுந்தன. ஆனால் திமுக ஆட்சியிலும் இது தொடர்வாக குற்றம்சாட்டுகிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்.. தொடர்ந்து கனிம வளக்கொள்ளை நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
களியக்காவிளை சோதனைச்சாவடி வழியாக தினமும் ஏராளமான லாரிகள் செல்வதாகவும், இதுதவிர காக்காவிளை, நெட்டா போன்ற பிற வழிகளிலும் கல் பாரம் ஏற்றிய நூற்றுக்கணக்கான லாரிகள் கேரளாவுக்கு பயணிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளது. இதனிடையே கனிம வள லாரிகளால் சாலைகள் சேதமடைந்து விபத்துக்கள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.. இந்த பிரச்னை பெரிதாக பேசப்பட்ட நிலையில், கனரக வாகனங்கள் முக்கிய நேரங்களில் செல்ல தடை விதித்தது மாவட்ட நிர்வாகம்
இதன்படி கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கனிம வளங்கள் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கன்னியாயகுமரி மாவட்ட கலெக்டர் கடந்த பிப்ரவரி 20ம் தேதி அறிவித்திருந்தார். பிப்ரவரி அன்று வெளியிட்ட அறிப்பின்படி காலை 6 மணி முதல் 10 மணி வரை மற்றும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை கனிம வளங்கள் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
மேலும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை கனிம வளங்கள் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் மாவட்டத்திற்குள் இயங்க அனுமதிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்திருந்தார். ஆனால் மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கையை மீறி வாகனங்கள் சென்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியினர் கனரக வாகனங்களை சிறைபிடிப்பார்கள் என்று விஜய் வசந்த் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications