கட்சி நிகழ்ச்சிகளுக்கு கல்தா கொடுக்கும் விஜயதரணி எம்.எல்.ஏ... நிர்வாகிகள் புலம்பல்
கன்னியாகுமரி: விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான விஜயதரணி அண்மைக்காலமாக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
முன்பைக்காட்டிலும் தொகுதிக்கு வருவதை கூட அவர் இப்போது குறைத்துக்கொண்டார் என குமரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
காங்கிரஸ் கட்சிக்கே உரிய கோஷ்டிப்பூசல் தான் இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

2 முறை எம்.எல்.ஏ.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் இருந்து 2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் விஜயதரணி. இவர் தனது கருத்துக்களை யாருக்கும் அஞ்சாமல் மனதில் பட்டதை அப்படியே வெளிப்படுத்தக் கூடியவர். காங்கிரஸ் பிரதிநிதியாக ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு ஓங்கி உரக்க கட்சிக்காக குரல் கொடுத்து வந்தார்.

பதவி பறிப்பு
மிகவும் ஆக்டிவாக இயங்கி வந்த விஜயதரணி எம்.எல்.ஏ. இரண்டு நிகழ்வுகளுக்கு பிறகு தனது தீவிர செயல்பாட்டை குறைத்துக்கொண்டார். ஒன்று அவரிடம் இருந்த மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியை பறித்து ஜான்சி ராணிக்கு அப்போதைய தலைவர் இளங்கோவன் வழங்கியது. மற்றொன்று தனது கணவர் காலமானது. இந்த இரண்டு நிகழ்வுகளுக்கு பிற்கு படிபடியாக கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகளை குறைத்துக்கொண்டார் விஜயதரணி.

திமுக கோபம்
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரை வெளிப்படையாக புகழ்ந்து பேசி திமுகவின் கோபத்துக்கு ஆளானார். மேலும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இளங்கோவன் இருந்தபோது விஜயதரணி நடத்திய மல்லுக்கட்டு டெல்லி அக்பர் சாலை வரை எதிரொலித்தது. காங்கிரஸ் தலைமையிடம் இளங்கோவனை பற்றி முறையிடுவதற்காக அப்போது ஒரு மாதகாலம் டெல்லியிலேயே முகாமிட்டிருந்தார். ஆனால் அவரை கட்சித் தலைமை சட்டை செய்ததாக தெரியவில்லை.

ஒதுங்கிக் கொண்டார்
இந்நிலையில் 2016-ல் 2-வது முறை எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்ற பின்னர், தொகுதி செயல்பாடுகளுடன் தனது பணியை நிறுத்திக்கொள்கிறார் விஜயதரணி. கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தொடர்ந்து தவிர்த்து வருகிறார். இதற்கு குமரி மாவட்டத்தில் நிலவும் கோஷ்டிப் பூசலே காரனம் எனக் கூறப்படுகிறது.

குமரி பெருமை
தமிழகத்தில் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கொண்ட மாவட்ட கன்னியாகுமரி. பிரின்ஸ், ராஜேஷ், விஜயதரணி ஆகிய மூன்று பேருக்குள் மாவட்டத்தில் யார் பெரியவர்கள் என்பதில் பனிப்போர் நிலவி வருகிறது. இதனிடையே கன்னியாகுமரி எம்.பி.யாக வசந்த்குமார் வெற்றிபெற்றதை அடுத்து அந்தப் பணிப்போர் இன்னும் அதிகரித்துள்ளது.

மறியல் போராட்டம்
வசந்த்குமார் எம்.பி.தலைமையில் காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்றும் குமரியில் நடைபெற்றது. அதில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், சாலைப் பணிகளை மேற்கொள்ள வேண்டியும் 16-ம் தேதி 5 இடங்களில் போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தையும் விஜயதரணி புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications