திமுகவிடம் 10 சீட்டுக்கு குறையாமல் கேட்டு வாங்குவோம்! காங்கிரஸ் எம்.எல்.ஏ.விஜயதரணி திட்டவட்டம்!
கன்னியாகுமரி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக விடம் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளுக்கு குறையாமல் கேட்டு வாங்குவோம் என விஜயதரணி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நேற்றிரவு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் இதனைக் கூறினார்.
கடந்த தேர்தலில் திமுகவிடம் பெறப்பட்ட தொகுதிகளை காட்டிலும் இந்த முறை குறைத்து வாங்கமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் விஜயதரணி எம்.எல்.ஏ. கூறியிருக்கும் இந்த தகவல் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக தரப்பில் 8 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படும் நிலையில் விஜயதரணி எம்.எல்.ஏ. 10 சீட்களுக்கு குறையாமல் கேட்டு பெறுவோம் எனக் கூறியுள்ளார்.

கடந்த முறையை போலவே இந்த முறையும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாகவும் அதிமுக -பாஜக கூட்டணி முறிவால் திமுக காங்கிரஸ் வெற்றி சுலபமாகிவிட்டதாக தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒரே அணியின் கீழ் இந்தியா கூட்டணியில் இருந்தாலும், தமிழகத்தில் மட்டும் சீட் பங்கீட்டில் காங்கிரஸ் கறாராக இருக்கும் என்பதை விஜயதரணி தனது பேட்டி மூலம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாட்கள் நெருங்கி வருவதால் திமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கான குழு விரைவில் அமைக்கப்படும் எனத் தெரிகிறது.
அந்தக் குழு முதலில் முஸ்லீம் லீக் கட்சியிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தொகுதியை ஒதுக்கிய பிறகு மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும். காங்கிரஸ் அதிக இடங்களை எதிர்பார்ப்பதாலும், தொகுதி பங்கீட்டில் சிக்கல் இருக்கும் என்பதாலும் வழக்கம் போல் காங்கிரஸ் கட்சியிடம் கடைசியாகவே திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு பேசும் எனத் தெரிகிறது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளை அடையாளம் காணும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். கன்னியாகுமரி, கரூர், விருதுநகர், ஆரணி, சிவகங்கை, உள்ளிட்ட தொகுதிகளை காங்கிரஸ் மீண்டும் தொகுதி பங்கீட்டில் எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications