மாஸ்டர் பிளான்.. விஜயதரணியை எதிர்த்து களமிறக்கப்படும் ஜெயசீலன்.. உற்சாகத்தில் பாஜக!
கன்னியாகுமரி: விளவங்கோடு சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நீண்ட போராட்டத்திற்கு பிறகு விஜயதரணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோல் பாஜக சார்பில் ஜெயசீலன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாஜக, காங்கிரஸ் இரண்டுமே தங்கள் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்த தொகுதிகளுக்கு கடந்த இரண்டு நாட்களில் தான் அறிவித்துள்ளன.
பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே அறிவித்த வேட்பாளர் பட்டியலில், இரண்டு கட்சிகளுக்குமே வாக்கு வங்கி அதிகம் உள்ள விளவங்கோடு தொகுதி பற்றி இப்போது பார்ப்போம்.
அதிமுக- திமுக வென்றதில்லை
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் இதுவரை ஒரு முறை கூட திமுக மற்றும் அதிமுக வெற்றி பெற்றது இல்லை 1952ம் ஆண்டு முதல் 2016 வரையில் அதிகபட்சமாக காங்கிரஸ் 8 முறையும், கம்யூனிஸ்டுகள் ஆறு முறையும் வென்றுள்ளார்கள். பாஜக இங்கு ஒருமுறை கூட வென்றது இல்லை.
ஜெயசீலன் 3வது இடம்
2011 மற்றும் 2016ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல் விஜயதரணி வெற்றி பெற்றார். 2011ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஜயதரணி 62898 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட லீமா ரோஸ் 39109 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார். பாஜக சார்பில் போட்டியிட்ட ஜெயசீலன் 37763 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்தார்.
பாஜக 2வது இடம்
2016ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஜயதரணி 68,789 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 35,646 இரண்டாவது இடத்தை பிடித்தார். 3வது இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்லசாமி பிடித்தார். நான்காவது இடத்தை 24801 வாக்குகளுடன் அதிமுக பிடித்தது.
செம்ம போட்டி
விளவங்கோடு தொகுதியில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் ஒன்று சேர்ந்து களம் காண்பது காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. இதேநேரம் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்திருப்பதால் அவருக்கு எதிராக எழும் அதிருப்தி அலைகளை வாக்குகளாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் பாஜக களம் இறங்கி உள்ளது. அதுவும் 2011ல் அவரை எதிர்த்து களம் கண்ட ஜெயசீலனை நிறுத்தி உள்ளது. அதிமுக கூட்டணியில் இருப்பது பாஜகவிற்கு பலமாக பார்க்கப்படுகிறது. கடந்த முறை 2வது இடம் பிடித்த பாஜக இந்த முறை வெல்லுமா அல்லது விஜயதரணியே 3வது முறையாக வெல்வாரா என்பது வரும் மே 2ம் தேதி தெரிந்துவிடும்.
நிச்சயம் வெற்றி
இதனிடையே இந்த முறை நிச்சயம் பாஜக விளவங்கோட்டில் வெல்லும் என்று பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில் உள்ள அதிருப்தியே விஜயதரணிக்கு எதிராக அமையும் என்றும், ஜெயசீலன் வலுவான வேட்பாளர், எளிமையான மனிதர் என்பதால் கடந்த முறை 2வது இடத்தை பிடித்த இந்த முறையை வென்று அசத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.