கன்னியாகுமரியில் நாகர்கோவில் நண்பர்களுக்கு.. நள்ளிரவில் எமனாக மாறிய சிமெண்ட் சிலாப்.. என்ன நடந்தது?
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பறக்கை ரோடு பகுதியை சேர்ந்த முகம்மது அப்துல்காதர் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் ரையான் என்பவரும், அவரது நண்பர் முகம்மது ஷபான் சிராஜ் என்பவரும் இணை பிரியாத நண்பர்கள். எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்களாம். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் ரையானின் பைக்கில் இருவரும் சென்றுள்ளார்கள். அங்கிருந்த சிமெணட் சிலாப் இருவருக்கும் எமனாக மாறி உள்ளது.
சாலைகளில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் கவனமாக பயணிக்க வேண்டும். நாம் நன்றாகவே சென்றாலும், எதிரே என்ன மாதிரியான சூழல்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை வரலாம். பலருக்கும் சாலை விதிகள் என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கிறார்கள். சாலை விதிகளை பலர் மதிப்பதே இல்லை..சிலர் அதிவேகமாக சென்று விபத்தில் சிக்கி கொள்கிறார்கள். நாகர்கோவில் அருகே நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

நாகர்கோவில் நண்பர்கள்
நாகர்கோவில் பறக்கை ரோடு பகுதியை சேர்ந்த முகம்மது அப்துல்காதர் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய 20 வயது மகன் ரையான் டிப்ளமோ படித்து முடித்திருக்கிறார். ரையானின் நெருங்கிய நண்பர் வடக்கு சூரங்குடியை சேர்ந்த முகம்மது சத்திக் என்பவரது மகன் முகம்மது ஷபான் சிராஜ்க்கு 21 வயது ஆகிறது. இவரும் டிப்ளமோ முடிந்துள்ளார். ரையானும், முகம்மது ஷபான் சிராஜூம் இணை பிரியாத நண்பர்களாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். எங்கு சென்றாலும் ஒன்றாக சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார்கள் வெளியூர் சென்றாலும் சரி, வெளியே சாப்பிட சென்றாலும் ஒன்றாகவே செல்வார்களாம்.
டீ குடிக்க சென்றனர்
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் ரையான் தனது மோட்டார் சைக்கிளில் தோழனாகிய முகம்மது ஷபான் சிராஜை அழைத்துக்கொண்டு நாகர்கோவிலில் இருந்து காவல்கிணறு செல்லும் 4 வழிச்சாலையில் சென்றிருக்கிறார். பின்னர் அவர்கள், சுங்கச்சாவடி பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்து விட்டு மீண்டும் நாகர்கோவில் நோக்கி புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை ரையான் ஓட்டினார். முகம்மது ஷபான் சிராஜ் பின்னால் அமர்ந்திருக்கிறார்.
என்ன நடந்தது
அவர்கள் திருப்பதிசாரம் பிரிவுச்சாலை பகுதியில் வந்தபோது திடீரென அவர்கள் வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதியது. ரையான் ஓட்டிய பைக், சாலை தடுப்பில் மோதிய வேகத்தில் தடுப்பின் எதிர்திசையில் சாலையின் நடுவே இருந்த மையத்தடுப்பில் மோதி நின்றது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் இருவரும் அருகில் இருந்த சிமெண்டு சிலாப்பில் மோதி படுகாயமடைந்தனர். இதனால் ரையான் மற்றும் ஷபான் சிராஜ் ஆகிய இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மருத்துவமனையில் அனுமதி
இதை கண்ட வாகன ஓட்டிகள் உடனே இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்தில் இறந்து கிடந்த ரையான், முகம்மது ஷபான் சிராஜ் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications