கோடிகளில் சொத்து, அமெரிக்காவில் செட்டில்.. கடைசியில் கன்னியாகுமரியில் சகோதரிகள் இருந்த கோலம்
கன்னியாகுமரி: கோடிகளில் சொத்து, அமெரிக்காவில் செட்டில்.. நினைத்ததை வாங்க முடியும் என்கிற வாழ்க்கை சூழல்... அத்தனையும் இருந்தும் சகோதரிகள் திருமணம் செய்து கொள்ளவில்லை.. 15 வருடங்களாக அமெரிக்காவில் வசிக்கும் அவர்கள், தங்களின் கடைசி நிமிடத்தை கன்னியாகுமரியில் இருக்க ஆசைப்பட்டு வந்துள்ளார்கள். அவர்கள் எடுத்த தவறான முடிவும், உருக்கமான மெயிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாழ்க்கையில் என்ன தான் சம்பாதித்தாலும், வாழ்க்கையில் என்ன தான் சாதித்தாலும் , திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வசிப்பது என்பது ஆண், பெண் இருவருக்குமே ஒரு கட்டத்தில் வெறுமைக்கு காரணம் ஆகிவிடும். அந்த வெறுமை சில நேரம் தவறான முடிவில் தள்ளும்.. அப்படித்தான் ஒரு சகோதாரிகள் அமெரிக்காவில் இருந்து வந்து கன்னியாகுமரியில் தவறான முடிவு எடுத்துள்ளார்கள். கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த இடத்தில் தவறான முடிவெடுத்த அவர்கள், கடைசி நிமிடத்தில் தங்களது அக்காளுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பி உள்ளார்கள்.

மூத்த மகள் லண்டனில் செட்டில்
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் குறிகாட்டியில், கிடங்கூர் பகுதியை சேர்ந்தவர் பிலிப். இவருடைய மனைவி மேரி. இந்த தம்பதிக்கு எலிசபெத் பிலிப், ஆனி பிலிப் (வயது 35), மீரா பிலிப் (32) என 3 மகள்கள் இருந்தனர். இவர்களில் மூத்த மகளான எலிசபெத் பிலிப் திருமணமாகி லண்டனில் கணவன் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
அமெரிக்கா டூ கன்னியாகுமரி
அவரது தங்ககைகளான ஆனி பிலிப், மீரா பிலிப் ஆகிய இருவரும் கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்காவில் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் இருவருமே வாழ்க்கையின் போக்கில் ஓடியபடி இருந்தனர். திருமணமே செய்து கொள்ளவில்லை இவர்கள் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தனர். பின்னர் சகோதரிகள் இருவரும் ராமேஸ்வரம், மதுரை போன்ற இடங்களுக்கு சுற்றுலா சென்றுவிட்டு கடந்த 26-ந்தேதி மாலையில் கன்னியாகுமரிக்கு வந்தனர். இங்குள்ள ஒரு விடுதியில் 2 பேரும் அறை எடுத்து தங்கினர்.
கன்னியாகுமரி லாட்ஜ்
இதையடுத்து மறுநாள் சகோதரிகள் இருவரும் கன்னியாகுமரி லாட்ஜில் இருந்து வெளியே சென்றனர். பின்னர் அவர்கள் விடுதிக்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சகோதரிகளை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலையில் கன்னியாகுமரி வாவத்துறை கடலில் தூண்டில் வளைவு பகுதியில் சகோதரிகள் இருவரும் கடலில் குதித்து வாழ்க்கையை முடித்துக் கொண்டது தெரிய வந்தது.
உருக்கமான மெயில்
முன்னதாக தவறான முடிவு எடுப்பதற்கு முன்பு, மூத்த அக்காள் எலிசபெத் பிலிப்புக்கு சகோதரிகள் இருவரும் உருக்கமான மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில் தாங்கள் மன வருத்தத்துடன் ஊருக்கு புறப்படுகிறோம். இனி எங்களை தொடர்பு கொள்ள முயற்சிக்க வேண்டாம். எங்களுக்காக ஒன்று மட்டும் செய்யுங்கள். நாங்கள் இருவரும் இறந்த பின்னர் கன்னியாகுமரிக்கு வந்து எங்களுக்கு இறுதி சடங்கு செய்துவிட்டு அஸ்தியை கன்னியாகுமரி கடலில் கரைத்து விட வேண்டும் என உருக்கமாக கூறியிருக்கிறார்களாம்" இந்த தகவலை உறவினர்கள் போலீசாருக்கு தெரிவித்துள்ளனர்.
முக்கிய அறிவிப்பு: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது.. தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.












Click it and Unblock the Notifications