லட்சக்கணக்கில் சம்பளம்! வெளிநாட்டில் வேலை! நாம் தமிழர் கட்சிக்காக தூக்கியெறிந்த மரிய ஜெனிஃபர்!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மரிய ஜெனிஃபர் யார், அவரது பின்னணி என்ன என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தொகுதி வாரியாக முன் கூட்டியே அறிவித்து வருகிறார் நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான். அந்த வகையில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மரிய ஜெனிஃபர் போட்டியிடவுள்ளார். 42 வயதாகும் இவர் கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் BE கம்ப்யூட்டர் சயின்ஸும், சென்னையில் உள்ள ICFAI கல்லூரியில் MBA மார்கெட்டிங்கும் படித்திருக்கிறார்.

தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் டெலிகாம் இண்டஸ்ட்ரியில் விற்பனை மற்றும் வணிக அபிவிருத்தி அதிகாரியாக 17 ஆண்டுகாலம் பணியாற்றியிருக்கிறார் மரிய ஜெனிஃபர். குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம் உட்பட வெளிநாடுகளிலு இவர் வேலை பார்த்திருக்கிறார். மாதம் தோறும் லட்சக்கணக்கில் ஊதியம் பெற்று வந்த இவர், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கன்னியாகுமரியில் களம் காண்பதால் வேலை, ஊதியம், வெளிநாட்டு வாழ்க்கை என எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு தேர்தல் களத்துக்கு வந்துள்ளார்.
மரிய ஜெனிஃபரின் கணவர் சாலமன் தீபக்கும் BE, MBA படித்திருக்கிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஜெனிஃபர் -சாலமன் தீபக் தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்தச் சூழலில் தான் அவர் தற்போது தீவிர அரசியலுக்கு நுழைந்து தேர்தல் களம் காண்கிறார், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை காங்கிரஸ் சற்று வலிமையான தொகுதியாகும். அண்மைக் காலமாக நாம் தமிழர் கட்சியும் ஓரளவு வலிமையான வாக்கு வங்கியை கட்டமைத்துள்ளது.
காங்கிரஸ், பாஜகவுக்கு கடும் டஃப் கொடுக்கும் கட்சியாகவும் அங்கு திகழ்கிறது. தமிழகத்தின் கடைக்கோடி தொகுதியான கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்குள் நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், விளவங்கோடு, கன்னியாகுமரி, கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் விஜய் வசந்த் போட்டியிடுவார் என்பதால் களத்தில் அனல் பறக்கிறது.












Click it and Unblock the Notifications