நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்ட 15 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்.. பூச்சிகொல்லி மருந்தில் சமையல்!
கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்ட 15 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கரூர் மாவட்டம் நல்லாகவுண்டம்பட்டியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளி விடுமுறை விடப்பட்டதை அடுத்து ஒன்றாக சேர்ந்து அவர்களாகவே கூட்டாஞ்சோறு சமைத்து சாப்பிட நினைத்தனர்.
இதற்காக ஆளுக்கு ஒரு மளிகை பொருளை கொண்டு வருவது என முடிவு செய்து, யார் யார் என்னென்ன கொண்டு வர வேண்டும் என்பதையும் அவர்கள் சொல்லிவிட்டனர்.

இவர்களுடைய மெனு அரிசிக்கு பதிலாக நூடுல்ஸை வைத்து சமைப்பது என்பதாகும். இதற்கு தேவையான பொருட்களை மாணவ, மாணவிகள் கொண்டு வந்தனர். இந்த நிலையில் மாணவன் ஒருவன் நல்லெண்ணெய் கொண்டு வருவதாக ஒரு பாட்டிலில் கொண்டு வந்துள்ளான். அதை பயன்படுத்திதான் நூடுல்ஸை இவர்கள் செய்ததாக தெரிகிறது.
இதையடுத்து நூடுல்ஸ் தயாரித்து முடித்ததும் அனைவரும் வட்ட வடிவில் உட்கார்ந்தனர். அங்குள்ள தோட்டத்தில் இருந்து வாழை இலைகளை கொண்டு வந்தனர். தண்ணீர்கொண்டு வரப்பட்டு அனைவரும் அவர்களுக்கு தேவையான நூடுல்ஸை போட்டுக் கொண்டனர். அப்போது பரிமாறப்பட்ட நூடுல்ஸில் கால்வாசி சாப்பிட்டதும் ஒரு மாணவிக்கு வாந்தி ஏற்பட்டது.
அவருக்கு என்ன ஆயிற்று என கேட்க போன அத்தனை மாணவ, மாணவிகளுக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து சிலருக்கு மயக்கமும் ஏற்பட்டது. பின்னர் தகவலின்பேரில் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பிறகு உணவில்தான் ஏதோ ஃபுட் பாய்சன் ஆனதாக மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து மாணவ, மாணவிகள் சமைத்த இடத்திற்கு பெற்றோர் போய் பார்த்தனர்.

அப்போதுதான் அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு மாணவன் நல்லெண்ணெய் என நினைத்து கொண்டு வந்தது உண்மையில் எண்ணெய் அல்ல. களைக் கொல்லி பூச்சி மருந்து. அது பார்ப்பதற்கு அடர்த்தியாகவே எண்ணெய் போல் இருக்கும். பொதுவாக கிராமபுறங்களில் எண்ணெய்களை ஏதாவது காலி கண்ணாடி பாட்டில்களில்தான் கொட்டி வைப்பர்.
அது போல் தன் அம்மா நல்லெண்ணெய்யை இந்த பாட்டிலில் வைத்துள்ளதாக நினைத்த அந்த மாணவன் அந்த எண்ணெய்யை கொண்டு வந்துவிட்டான். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மயங்கிய மாணவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். பூச்சி மருந்து போட்டு தயாரித்த நூடுல்ஸை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications