விடிய விடிய.. செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக ஐடி ரெய்டு! பாதுகாப்பு படை குவிப்பு
கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று காலை தொடங்கிய வருமான வரித்துறை சோதனை விடிய விடிய சோதனை நடைபெற்ற நிலையில் இன்று 2 வது நாளாக தொடர்ந்து வருகிறது.
தமிழ்நாடு மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர்.

கரூர், கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பகுதிகளில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினார்கள். கரூரில் சோதனையில் ஈடுபட சென்ற ஐடி அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
தமிழ்நாடு மட்டுமின்றி தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்திலும் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நேற்று தொடங்கியது. கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் ஐடி அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
அதேபோல் அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டின் முக்கிய அமைச்சராகவும், செல்வாக்கு மிகுந்த திமுக நிர்வாகியாகவும் பார்க்கப்படும் செந்தில் பாலாஜி வீட்டில் நேற்று நடைபெற்ற ஐடி சோதனை மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கரூரில் சோதனையிட சென்ற தங்கள் மீது தாக்குதல் நடைபெற்றதாக கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தஞ்சமடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட வந்ததாக காவல்துறை தெரிவித்தது.
வருமான வரித்துறை அதிகாரிகளின் புகாரை தொடர்ந்து ஐடி சோதனை நடைபெற்ற இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். சில இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சுவர் ஏறிக்குதித்து உள்ளே சென்றதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக செந்தில் பாலாஜியின் நண்பர் தங்கராஜ் வீடு பூட்டப்பட்டு கிடந்ததால் ஐடி ரெய்டுக்கு சென்ற அதிகாரிகள் சுவர் ஏறிக்குதித்து உள்ளே சென்று இருக்கிறர்கள். அதே நேரம் வருமான வரித்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தன்னுடைய வீட்டில் சோதனை நடக்கவில்லை என்றார்.
இந்த நிலையில் நேற்றிரவு கரூர் துணை மேயர் தாரணி சரவணன் வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரவு அவரது வீடு பூட்டப்பட்ட நிலையில், வீட்டுக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர். விடிய விடிய நடைபெற்ற ஐடி சோதனை இன்றும் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் 200 பேர் கரூருக்கு விரைந்து இருக்கிறார்கள். தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் அங்கு பதற்றமான நிலை நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications