கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கிய 4 மாணவிகள் பலி.. விபத்து நடந்தது எப்படி? நடந்தது என்ன?
கரூர் மாயனூர் கதவணை காவிரியாற்றில் மூழ்கி 4 மாணவிகள் பலி
கரூர் : கரூர் மாவட்டத்தில் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கிய 4 மாணவிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பிலிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 15 க்கும் மேற்பட்ட மாணவிகள் திருச்சி மாவட்டத்தில் தொட்டியத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த கால்பந்து போட்டியில் கலந்து கொள்ள சென்றனர்.
அந்த விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்தவுடன் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது மாயனூர் கதவணையை பார்க்க விரும்பினர்.

அணையின் அழகு
இதையடுத்து மாணவிகள் அங்கு சென்று அணையின் அழகை ரசித்தனர். மேலும் அங்கிருந்த செல்லாண்டியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து ஒரு மாணவி காவிரி ஆற்றில் இறங்கினார். அப்போது அங்கு சுழல் இருந்ததை அறியாததால் அவர் நீரில் மூழ்கினார். இவரை பார்த்த மேலும் 3 மாணவிகள் அவரை காப்பாற்ற ஆற்றில் இறங்கினர்.

கூச்சலிட்ட மாணவிகள்
அப்போது அவர்களும் நீரில் மூழ்கினர். இதை பார்த்த மற்ற மாணவிகள் கூச்சல் போட்டதை அடுத்து அக்கம்பக்கத்தினர் வந்து மாணவிகளை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனாலும் அவர்களால் முடியவில்லை. இதையடுத்து கரூர், முசிறி ஆகிய பகுதிகளிலிருந்து 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர்.

4 பேர் சடலம்
அவர்கள் வந்து ஆற்றில் 2 மணி நேரமாக தேடினர். அப்போது 4 மாணவிகளும் ஒவ்வொருவராக சடலமாக மீட்கப்பட்டனர். அவர்கள் 4 பேரும் 17 வயதுக்குள்பட்ட மாணவிகள். தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா ஆகிய 4 மாணவிகள் இறந்துள்ளனர். இவர்களில் இனியாவும் லாவண்யாவும் 6 ஆம் வகுப்பு படித்து வந்தனர்.

உடல்கள் எங்கே
தமிழரசி 7ஆம் வகுப்பும் சோபியா 8ஆம் வகுப்பும் படித்து வந்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்த காவிரி ஆற்று பகுதி ஆழமான பகுதி என அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். சுழல் இருப்பது தொடர்பாகவும் ஆழம் அதிகம் என்றும் அங்கு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

சுழல் இருந்தது
எனினும் அதை மாணவிகள் கவனிக்காமல் இறங்கினரா என தெரியவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 4 மாணவிகள் பலியான சம்பவம் குறித்து தகவலறிந்த பெற்றோர் பள்ளிக்கு விரைந்தனர். அங்கு ஆசிரியர்களுடன் வாக்குவாதம் நடத்தினர். விளையாட்டு போட்டிகளுக்கு சென்றுவிட்டு நேராக வீட்டுக்கு வராமல் எதற்காக அணைக்கு அழைத்து சென்றீர்கள் என்ற கேள்வி எழுப்பினர்.

15 மாணவிகள்
மேலும் சிறிய குழந்தைகளை அழைத்து செல்லும் போது அலட்சியமாக இருப்பது சரியா என கேள்வி எழுப்பினர். மேலும் இந்த 15 மாணவிகளையும் உடற்பயிற்சி ஆசிரியரும் இன்னொரு ஆசிரியரும் அழைத்து சென்றனர். மாவட்ட கல்வி நிர்வாகத்தின் ஷெட்யூல்படி பள்ளியிலிருந்து தொட்டியம் தனியார் கல்லூரி, அங்கு விளையாட்டு போட்டிகள் முடிந்ததும் நேராக மீண்டும் பள்ளிக்கே அழைத்து வருவதுதான். அப்படி இருந்த போது மாயனூர் அணைக்கு யார் அழைத்து போக சொன்னது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பரபரப்பு
4 மாணவிகளின் பெற்றோரும் சம்பவ இடத்தில் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இறந்த மாணவிகளின் தோழிகள் பள்ளியில் குவிந்துள்ளனர். தங்கள் தோழியின் இறப்பை அறிந்து கதறி அழுகிறார்கள். பெற்றோர் , மாணவிகள் என அந்த பகுதியில் அழுகுரல் கேட்கிறது. பெற்றோரை சமாதானப்படுத்த வருவாய் கோட்டாட்சியரும் இலுப்பூர் மாவட்ட டிஎஸ்பியும் சென்றுள்ளனர்.

முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த 4 மாணவிகளின் குடும்பத்திற்கும் தலா ரூ 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலிின் அறிவித்துள்ளார். மேலும் மாணவிகளின் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications