கரூரில் போடாத சாலைக்கு ரூ. 3 கோடி சுருட்டல்... எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார் - 4 பேர் சஸ்பெண்ட்
நெடுஞ்சாலை துறையின் கரூர் கோட்ட பொறியாளர் சத்தியபாமாவை, நெடுஞ்சாலை துறை முதன்மை செயலாளர் பணியிடைநீக்கம் செய்துள்ளார்.
கரூர்:கரூரில் சாலை போட்டதாக கூறி 3 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரில், 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற நிலையில் நெடுஞ்சாலை துறையின் கரூர் கோட்ட பொறியாளர் சத்தியபாமாவை, நெடுஞ்சாலை துறை முதன்மை செயலாளர் பணியிடைநீக்கம் செய்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கும் தற்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கரூரில் சாலை போடும் பணி தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மிகப்பெரிய புகாரை முன் வைத்தார்.

கரூர் ஈசநத்தம் சாலை தற்போது போடப்பட்டதாக கணக்கு காட்டியுள்ளதையும், இதே போல், வால்காட்டுப்புதூர், சுக்காலியூர் ஈசநத்தம் கரூர் மூன்று வழிசாலைகள், புகளூர் இ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலை செல்லும் சாலை, மண்மங்கலம் நன்னியூர் புதூர் ஆகிய சாலைகளும், வேலாயுதம்பாளையம் பகுதியில் சில சாலைகளும் சேர்த்து ரூ.4 கோடி அளவில் மொத்தமாக ரூ.10 கோடி அளவில், தார்சாலைகள் புதிதாக போடப்பட்டதாக கணக்கு காட்டி பணம் எடுத்துள்ளதாகவும், இந்த சாலைகள் ஏற்கனவே தரமாக உள்ளதாகவும் செய்தியாளர்களிடம் புகார் தெரிவித்தார் விஜயபாஸ்கர்.
ஆங்காங்கே அந்த சாலைகளை ஆதாரப்பூர்வமாக காட்டி, ஏற்கனவே போடப்பட்ட சாலைகளுக்கு தான் இந்த புதிய சாலை என்ற பெயர் வைத்து அதற்கான பணத்தினை பெற்றுள்ளனர் என்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் மனுவை அளித்தார் எம்.ஆர் விஜயபாஸ்கர். கரூர் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் 170 கோடியில் நெடுஞ்சாலைத் துறையில் பணிகளுக்கு ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது. ஈசநத்தம், கூம்பூர், வீரியப்பட்டி ஆகிய சாலைகளை, வேலை செய்யாமல் ஒப்பந்ததாரர் பணம் எடுத்துள்ளனர் என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
நன்றாக உள்ள இந்த சாலைகள், புதிதாக அமைக்கப்பட உள்ளதாக கூறி சுமார் 3 கோடி அரசு பணம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விசாரணை நடத்த வேண்டும். இதற்கு நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என தெரிவித்தார்.
மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளரும், ஒப்பந்ததாரருமான எம்.சி.எஸ் சங்கர் ஆனந்த், கரூர் மாவட்டத்தில் 170 கோடி ரூபாய் மதிப்பிற்கு சாலை பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த புகார் சர்ச்சையை கிளப்பிய சூழலில், கடந்த 8ம் தேதி அவசர அவசரமாக சாலை போடும் பணி நடைபெற்றுள்ளது.
இதனிடையே, விசாரணை நிறைவடையும் வரை சாலை போடும் பணியை நிறுத்த சொல்லி மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் எம்ஆர் விஜயபாஸ்கர் புகார் அளித்தார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி ஒப்பந்ததாரரின் டிப்பர் லாரிக்கு தீ வைத்ததாக அதிமுகவைச் சேர்ந்த 6 பேர் மீது 7 பிரிவில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தில் 4 முறையும், தலைமைச் செயலாளரிடமும் எம்.ஆர் விஜயபாஸ்கர் புகார் அளித்திருந்தார். ஆளுநருக்கும் தபால் மூலம் புகார் அனுப்பியுள்ளார். நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற நிலையில் நெடுஞ்சாலை துறையின் கரூர் கோட்ட பொறியாளர் சத்தியபாமாவை, நெடுஞ்சாலை துறை முதன்மை செயலாளர் பணியிடைநீக்கம் செய்துள்ளார்.
உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் பூபாலன் சிங், கரூர் கோட்டை கணக்கர் பெரியசாமி ஆகியோரை, திருப்பூர் மண்டல பொறியாளர் வளர்மதி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications