12 கல் குவாரிகளுக்கு ரூ.44 கோடி அபராதம்.. கரூரில் குவாரி அதிபர்களை கதி கலங்கச் செய்த அதிகாரிகள்!
கரூர்: கரூர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி, கற்களை வெட்டி எடுத்ததாக 12 கல் குவாரிகளுக்கு ரூ. 44.65 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமான குவாரிக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் தனியார் பட்டா நிலங்களில் 76 கல் குவாரிகளுக்கும், அரசு புறம்போக்கு நிலங்களில் 3 கல் குவாரிகளுக்கும் குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டு நடப்பில் உள்ளது. இவற்றில் பட்டா நிலத்தில் வழங்கப்பட்ட 12 குவாரிகள் முறையான அனுமதி பெற்றிருந்தும் தற்போது இயக்கத்தில் இல்லை.

கல் குவாரிகளில் விதிகளை காற்றில் பறக்க விட்டு, அனுமதியை மீறி அதிக ஆழத்தில் கற்கள் வெட்டப்பட்டு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், விதிமீறலில் ஈடுபடும் குவாரிகள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், கரூர் மாவட்டத்தில் குத்தகை நடப்பில் உள்ள கல்குவாரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், உதவி இயக்குநர் (நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை), சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகிய அலுவலர்கள் அடங்கிய குழு அமைத்து குவாரிகளில் கூட்டுப்புலத்தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த தணிக்கையில், விதிமீறல்கள் கண்டறியப்பட்ட குவாரிகளுக்கு அபராதம் விதித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 12 இடங்களில் மட்டும் ரூ.44,65,28,357 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 30 இடங்களுக்கு அபராதம் விதிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த சிவாயம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டிக்கு சொந்தமான கல் குவாரிக்கு அதிகபட்சமாக 23 கோடியே 54 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கரூர் மாவட்டத்தில் கல் குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது கல் குவாரி அதிபர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications