சிறுமிக்கு பாலியல் தொல்லை.. கரூர் மருத்துவர் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு
கரூர்: கரூரில் தீபாவளி போனஸ், புத்தாடைகள் தருவதாகக் கூறி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த எலும்பு முறிவு மருத்துவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கரூரை சேர்ந்த எலும்பு முறிவு மருத்துவர் ரஜினிகாந்த் கரூர் மேற்கு பிரதட்சணம் சாலையில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது மருத்துவமனையில் பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்த பெண் காசாளராக பணிபுரிந்த நிலையில் அவருக்கு, தீபாவளி போனஸ் குறைவாக கொடுத்ததால் வேலைக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மருத்துவமனை மேலாளர் சரவணன் கடந்த நவம்பர் 13ஆம் தேதி, காசாளரின் 17 வயது மகளை மொபைல் போனில் அழைத்து தீபாவளி போனஸ், புத்தாடைகள் தர மருத்துவர் ரஜினிகாந்த் வரச் சொல்கிறார் என கூறியுள்ளார்.
அதை நம்பிய சிறுமியும் மருத்துவமனைக்கு சென்று, ரஜினிகாந்த்தை சந்தித்துள்ளார். அப்போது, மருத்துவர் ரஜினிகாந்த் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவரது தாய், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நவம்பர் 14ஆம் தேதி புகார் கொடுத்தார். இதையடுத்து மருத்துவர் ரஜினிகாந்த், மேலாளர் சரவணன் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த ரஜினிகாந்த் தலைமறைவான நிலையில், மேலாளர் சரவணனை போலீசார் அவரை கைது செய்து கரூர் கிளை சிறையில் அடைத்தனர்.
தலைமறைவாக பதுங்கியிருந்த மருத்துவர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நான்கு நாட்களுக்கு பிறகு போலீசார் கைது செய்து கரூர் கிளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் 15 நாள் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் இன்று கரூர் மாவட்ட மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதி நசீமா பானு முன்னிலையில் மருத்துவர் ரஜினிகாந்த் ஆஜர்படுத்தப்பட்டார்.
மருத்துவர் ரஜினிகாந்துக்கு மேலும் மேலும் 15 நாள் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் மருத்துவ ரஜினிகாந்த் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.