தொடரும் வருமான வரி சோதனை.. கரூரில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்.. எத்தனை கோடி தெரியுமா? பரபர தகவல்
கரூர்: கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியுடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரி அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின்போது கட்டுக்கட்டாக கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை செந்தில் பாலாஜி நிர்வகித்து வருகிறார். இவர் மீது தொடர்ச்சியாக பாஜக, அதிமுக சார்பில் பல்வேறு முறைகேடு புகார்களை முன்வைத்து வருகிறது. மேலும் ஆளுநர் ஆர்என் ரவியிடமும் புகார் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே தான் நேற்று முன்தினம் முதல் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக், அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை யை தொடங்கினர். தமிழகத்தில் செந்தில் பாலாஜி தொடர்புடைய சென்னை, கோவை, கரூர் மாவட்டங்களில் மொத்தம் 40க்கும் அதிகமான இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று 3வது நாளாகவும் சென்னை, கோவை, கரூர் மாவட்டங்களில் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீடு உள்பட பலரது வீடுகளில் சோதனைகள் நடக்கின்றனர். சோதனையின்போது வருமானம் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் கணக்கில் வராமல் இருந்த பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள விபரம் வெளியாகி உள்ளது. அதாவது மொத்தம் ரூ.3.50 கோடி ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வீட்டில் இருந்த பணத்துக்கு உரிய கணக்கு விபரங்களை காட்டாத நிலையில் இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் அந்த பணம் யாருடைய வீடு, அலுவலகங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த வருமான வரி சோதனை இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது. இதனால் சோதனை முழுவதுமாக முடிவடைந்த பிறகு அதுபற்றிய விபரங்களை அதிகாரிகள் வழங்குவார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
முன்னதாக இன்றைய தினம் 250க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட பல இடங்களில் 3வது நாளாக வருமான வரி சோதனை நடந்தது. மேலும் கரூரில் நேற்று முன்தினம் சோதனைக்கு சென்ற வருமான வரித்துறையினரை திமுகவினர் வழிமறித்து தாக்கினர். ஐடி கார்டு கேட்டு அட்டூழியம் செய்ததோடு, காரையும் சேதப்படுத்தினர். இதுகுறித்த புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் 8 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications