Karur: இனியாவது பொறுப்புடன் இருங்க விஜய்.. வீக் எண்டில் பிரசாரம் வேண்டாம்.. அண்ணாமலை அட்வைஸ்
கரூர்: கரூர் விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியான சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை இன்று நேரில் சந்தித்த தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, வீக் எண்ட் பிரசாரம் வேண்டாம், இனியாவது பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள் என்று விஜய்க்கு அறிவுரை கூறினார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சனிக்கிழமைதோறும் பிரசாரம் மேற்கொண்டு வந்தார். அதன்படி நேற்று கரூரில் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின்போது கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் 10 பேர் பெண்கள் 17 பேர் என மொத்தம் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இன்னும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு பாஜக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:- முதலில் இந்த சம்பவத்துக்கு தமிழக அரசு தான் காரணம். எதோ பல தவறுகள், சில குளறுபடிகள் நடந்திருக்கிறது. மக்கள் கூட்டத்தை சரியாக கையாள்கின்றோமா என்று பார்த்தால் இல்லை.. எங்கள் முதல் குற்றச்சாட்டு மாநில அரசு மீது தான். வேலுச்சாமிபுரம் என்பது மிக குறுகலான இடம். அங்கு ஏன் போலீசார் அனுமதி கொடுக்க வேண்டும்.
கூட்டம் நடத்துவதற்கு வேலுச்சாமிபுரம் சரியான இடம் கிடையாது. அப்படி இருக்கும் போது ஏன் அங்கு கொடுக்க வேண்டும். அதுவும் விஜய்க்கு அதிக கூட்டம் வரும் என்று தெரிந்தும் அவர்கள் ஏன் அங்கு அனுமதி கொடுத்தனர். எனவே இதுபற்றி விசாரிக்க வேண்டும். சம்பவ இடத்தில் 100 போலீசார் கூட இல்லை. ஆம்புலன்ஸ் கூட போக முடியாத இடத்தில் போலீசார் அனுமதி கொடுத்து இருக்கிறார்கள்.
தமிழக அரசு கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து தவறி வருகிறது... கள்ளக்குறிச்சியை எடுத்துக்கொண்டாலும், மெரினா ஏர்ஷோவை எடுத்துக்கொண்டாலும் இப்படி தான். விஜய் தான் அக்யூஸ்டு நம்பர் ஒன் என்று நான் சொல்ல மாட்டேன். வீக் எண்ட் அரசியலில் இருந்து விஜய் வெளியே வர வேண்டும். கொஞ்சம் யோசித்து செயல்பட வேண்டும்.
விஜய் ஒரு பிரபலம். அவரை பார்ப்பதற்கு ஏகப்பட்ட பேர் வருவார்கள். அதுவும் சனிக்கிழமை என்றால் பெண்கள், குழந்தைகள் எல்லாரும் வரத்தான் செய்வார்கள். எனவே விஜய் திட்டமிட்டு செயல்பட வேண்டும். வீக் எண்ட் பிரசாரம் வேண்டாம், இனியாவது பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள்.
விஜய் தான் முதல் குற்றவாளி என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.. விஜய் லேட் ஆகி எல்லாம் வரவில்லை. அவர் கரூரில் மக்களை சந்திப்பது என்பது மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை என்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 7 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் விஜய் வரலாம்.
கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றது என்றால் ஏன் அனுமதி கொடுக்கிறீங்க.. கொடுக்க முடியாது என்று சொல்லிவிடலாமே.. அனுமதி கொடுத்து விட்டு அதற்கு பிறகு ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று விலக முடியாது. விஜய் பேசும் போது யாரோ செருப்பை கொண்டு வீசுகிறார்கள், கரண்டை கட் செய்கிறார்கள்.
விஜய் மீது அவரது ரசிகர்களே வீச மாட்டார்கள்.. இப்போது அமைந்திருக்கும் விசாரணை ஆணையம் மீது நம்பிக்கை இல்லை. சிபிஐ விசாரணை செய்ய வேண்டும். லாக் அப் டெத் வழக்கில் மட்டும் சிபிஐ விசாரணை கோரும் முதல்வர் இந்த சம்பவத்தில் ஏன் அப்படி சொல்லவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications