திடீர்னு கருணாநிதியை டார்கெட் செய்த அண்ணாமலை.. குளித்தலையில் 1957ல் கொடுத்த திமுக வாக்குறுதி என்ன?
கரூர்: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முதன்முதலில் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட குளித்தலை தொகுதியில் 1957ல் கொடுத்த வாக்குறுதியையே நிறைவேற்றவில்லை என அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் பதிவிட்டு உள்ளதாவது, "நேற்றைய மாலை என் மண், என் மக்கள் பயணம், கடம்பவனேஸ்வரர் அருள் வழங்கும் குளித்தலை மண்ணில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாத மக்களிடையே பெருஞ்சிறப்பாக நடந்தேறியது. இந்த பகுதியில் உள்ள திருஈங்கோய்மலை லலிதா தேவி ஆலயத்தில், பூஜை செய்யும் அனைவரும் பெண்களே. சனாதன தர்மத்தில் ஆணும் பெண்ணும் சமம் என்பதற்கு சான்றாக விளங்குகிறது இந்த லலிதா பரமேஸ்வரி ஆலயம். விவசாய பூமியான குளித்தலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், சுமார் 12000 ஹெக்டேரில் நெல், கரும்பு, வெற்றிலை மற்றும் வாழை விவசாயம் நடைபெறுகிறது.

கருணாநிதி முதன்முதலாக குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 1957ல் போட்டியிட்டபோது, குடகனாறு தண்ணீரை கரூருக்கு கொண்டு வர முயற்சிகள் எடுப்பேன் என உறுதி அளித்தார். இன்றுவரை இந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. 1957ல் கொடுத்த வாக்குறுதியே இன்னும் நிறைவேற்றவில்லை. ஆனால், கொடுத்த 512 வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டதாக பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின். இதே குளித்தலை சட்டமன்ற தொகுதியில், அன்று எதிர்க்கட்சியில் இருந்த முக ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது செய்வோம் என்றார்.
இன்று அந்தக் கைதை எதிர்க்கிறார். முதலமைச்சர் செய்யச் சொன்னதுதான் இன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதன் விளைவு, கரூர் சட்டமன்ற உறுப்பினர் இன்று புழல் சிறையில் இருக்கிறார். இங்குள்ள 1,170 ஏக்கர் பரப்பளவு கொண்ட பஞ்சப்பட்டி ஏரிக்கு, மாயனூர் காவிரி நீரை கொண்டு வர வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. 2 டிஎம்சி வரை நீரை தேக்க முடியும் அளவுக்கு தமிழகத்தின் மூன்றாவது பெரிய ஏரியான இந்த ஏரி, கடந்த 15 ஆண்டுகளாக நீரின்றி வறண்டு கிடக்கிறது.
மாயனூர் நீரை கொண்டு வந்தால் 15,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். திமுகவின் தேர்தல் வாக்குறுதியில், பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரி நீரை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறியிருந்ததை நிறைவேற்றவில்லை. திமுக விவசாயிகளுக்கு எதுவுமே செய்யவில்லை என்பதற்கு இந்த குளித்தலை தொகுதியே சாட்சி. கரூர் மாவட்டத்திற்கு மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பல லட்சம் பொதுமக்கள் பலன் பெற்றுள்ளனர். ஆனால் திமுக, கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. வரும் பாராளுமன்றத் தேர்தலில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நலத்திட்டங்கள் தொடர, ஊழல் சந்தர்ப்பவாத திமுக கூட்டணியைப் புறக்கணித்து, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்போம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications