கரூர் புதிய சொகுசு பங்களாவின் ஆவணங்களுடன் ஆஜராகுங்கள்! செந்தில் பாலாஜியின் தம்பி மனைவிக்கு ED சம்மன்
கரூர்: செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் மனைவி நிர்மலாவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கரூர்- சேலம் புறவழிச்சாலையில் ராம் நகர் பகுதியில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரின் மனைவி நிர்மலா பெயரில் பல கோடி மதிப்பில் சொகுசு பங்களா கட்டப்பட்டு வருகிறது.

இந்த சொகுசு பங்களா கட்ட நிலம் வாங்கியதில் மோசடி இருப்பதாகவும் இங்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை கொண்டு கட்டி வருவதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் கடந்த மே மாதம 26ஆம் தேதி வருமான வரித் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது தம்பி அசோக்குமார் மனைவி பெயரில் கட்டி வரும் புதிய பங்களாவில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் அசோக் குமார் வருமான வரித் துறை அலுவலகத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளித்த வேண்டும் என நோட்டீஸ் ஒட்டி சென்றனர். இது தொடர்பாக அசோக்குார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காமல் தலைமறைவாகவே இருந்து வருகிறார்.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது அமலாக்கத் துறையின் கஸ்டடியில் இருந்து வரும் நிலையில் கடந்த இரு தினங்களாக அவரிடம் நடத்தி வரும் விசாரணையில் இன்றைய தினம் அசோக்குமார் புதிதாக கட்டி வரும் பங்களாவில் 2 கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது கடந்த முறை வருமான வரித் துறையினரின் சோதனையின் போது நடந்ததை போல் பிரச்சினைகள் ஏற்படாதவண்ணம் துணை ராணுவப் படை சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பொதுப் பணித் துறை பொறியாளர்கள், நில அளவையர்களும் உடன் வந்தனர். பொறியாளர்கள் மூலம் கட்டடத்தை மதிப்பிடும் பணிகள் நடந்தன.
கரூர் செங்குந்தபுரத்தில் உள்ள அசோக்குமாரின் ஆடிட்டர் சதீஷ் குமார் அலுவலகத்திற்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்றனர். அங்கு யாரும் இல்லாததால் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் ஒட்டிவிட்டு வந்தனர். அது போல் கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அசோக்குமார் வீட்டுக்கு அமலாக்கத் துறையினர் சென்றனர்.
அங்கு யாரும் இல்லாததால் ராம் நகரில் புதிதாக கட்டி வரும் வீட்டின் ஆவணங்களுடன் விசாரணைக்கு அசோக்குமாரின் மனைவி நிர்மலா ஆஜராகுமாறு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அதே நேரம் ராம்நகரில் உள்ள புதிய பங்களாவில் சோதனை நடந்த வண்ணம் உள்ளது.












Click it and Unblock the Notifications