கரூர் ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல்.. வேட்பாளர் கடத்தல்- போர்க்களமான வேடசந்தூர்- திண்டுக்கல் ஹைவே!
கரூர்: கரூர் ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலை முன்வைத்து நிகழ்ந்த சம்பவங்களால் வேடசந்தூர்- திண்டுக்கல் நெடுஞ்சாலை பெரும் போர்க்களமாகிப் போனது.
கரூர் மாவட்ட ஊராட்சியில் மொத்தம் 12 உறுப்பினர்கள் உள்ளனர். 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் 8 பேரும், அதிமுக கூட்டணியில் தமாகாவைச் சேர்ந்த சிவானந்தம் என்ற ஒரு உறுப்பினர் என 9 பேரும், திமுகவில் 3 பேரும் வெற்றி பெற்றனர். இதனால் அதிமுக மாவட்டப் பொருளாளரான கண்ணதாசன் மாவட்ட ஊராட்சித் தலைவராகவும், அதிமுகவைச் சேர்ந்த முத்துகுமார் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

கடந்த சட்டசபை தேர்தலின்போது மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பதவியை முத்துகுமார் ராஜினாமா செய்துவிட்டு கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் திமுக வேட்பாளர் சிவகாமசுந்தரியிடம் முத்துகுமார் தோல்வியடைந்தார். அவர் பதவியை ராஜினாமா செய்ததால் மாவட்ட ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்குக் கடந்த அக்டோபர் 9-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் கண்ணையன் வெற்றி பெற்றார். இதனால் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் திமுகவின் பலம் 4 ஆக அதிகரித்தது. அதிமுகவின் பலம் 8 ஆகக் குறைந்தது.
இதற்கிடையில் அதிமுகவை சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் திமுகவில் இணைந்தனர். இதனையடுத்து தற்போது இரண்டு கட்சிகளும் சரிக்கு சமமாக உள்ளது. ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தல் ஏற்கனவே 5 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இன்று தேர்தல் நடைபெற இருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், துணைத் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட இருந்த திருவிக ஆகியோர் திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். திண்டுக்கல்- வேடசந்தூர் நெடுஞ்சாலையில் எம்.ஆர். விஜயபாஸ்கர் கார் சென்ற போது திமுகவினர் சிலர் அவரது வாகனத்தை தாக்கி திருவிகவை கடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் வேடசந்தூர் நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுகவினர் புகார் அளித்தனர். அப்போதும் அதிமுக- திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றம் ஏற்பட்டது. மேலும் வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் துர்காதேவி மற்றும் ஆய்வாளர் பாலமுருகன் கடத்தப்பட்ட திருவிகவை மீட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ஆசிட் வீசி வேட்பாளரை கடத்திச் சென்றனர். இதில் காரில் இருந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications