SC என்பதால் விஜய் வீடியோகாலில் பேசவில்லையாம்.. கரூர் நெரிசலில் தம்பியை பலி கொடுத்தவர் வருத்தம்
கரூர்: நடிகரும், தவெக தலைவருமான விஜயின் தேர்தல் பிரசாரத்தின்போது கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். பலியானவர்களின் குடும்பத்தினரை வீடியோ காலில் தொடர்பு கொண்டு விஜய் ஆறுதல் கூறி வருகிறார். இந்நிலையில் தான் ‛‛பட்டியலினத்தவர் என்பதாலே விஜய் எங்களிடம் பேசிவில்லையோ என்ற சந்தேகம் இருக்கிறது'' என்று கரூர் கூட்ட நெரிசலில் பலியான சதீஷ்குமாரின் அண்ணன் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் கடந்த மாதம் 27 ம் தேதி கரூரில் பிரசாரம் செய்தார். அப்போது திடீரென்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள், பெண்கள் என்று மொத்தம் 41 பேர் பலியாகினர். 50க்கும் அதிகமானவர்கள் சிகிச்சைமுடிந்துவீடு திரும்பினர்.

இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கியது. இதுதொடர்பாக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். கட்சியின்பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் தலைமறைவாகி உள்ளனர்.
வீடியோ காலில் விஜய் ஆறுதல்
இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்துக்கு விஜய் நேரில் ஆறுதல் சொல்லவில்லை. நெரிசலில் சிக்கி மக்கள் பலியானாலும் அவர் சென்னை திரும்பினார் என்று தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதன்பிறகு விஜய் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.
அதன்பிறகு சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு பிறகு விஜய் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை செல்போனில் தொடர்பு கொண்டு வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறினார். அப்போது விஜய், ‛‛சாரிங்க... நடக்கக் கூடாதது நடந்துடுச்சிம்மா... விரைவில் நீதிமன்ற அனுமதி பெற்று, அனைவரையும் வந்து சந்திக்கிறேன். இழப்பை என்னால் ஈடுசெய்ய முடியாது. இருப்பினும், என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்'' என்று கலங்கியபடி பேசியுள்ளார்.
பட்டியலினத்தவரிடம் பேசாத விஜய்
இந்நிலையில் தான் பட்டியலினத்தவர் என்பதால் விஜய் தங்களுடன் வீடியோ காலில் பேசவில்லை என்று கூட்ட நெரிசலில் இறந்த சதீஷ் குமார் என்பவரின் அண்ணன் குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர், ‛‛நானும் கேள்விப்பட்டேன். கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் சார் 10 முதல் 15 நிமிடம் வரை பேசியதை கேள்விப்பட்டேன். இதனால் என்னை அழைத்து உங்களிடம் விஜய் பேசினாரா? ஏன் தகவல் சொல்லவில்லை என்று உள்ளூர் பிரமுகர்கள், தெரிந்தவர்கள் கேட்டனர்.
எஸ்சி என்பதால்...
ஆனால் விஜய் எங்களிடம் பேசவில்லை. அவர் பேசாதது ஏன்? என்று யோசித்தபோது தான் ஒருவேளை பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலே நம்மை ஒதுக்குகிறார்களோ? என்ற சந்தேகம் வருகிறது. எங்களின் தம்பி சதீஷ் குமார் விஜயின் தீவிர ரசிகர். வேலையை முடித்துவிட்டு விஜயை பார்க்க அந்த கூட்டத்துக்கு சென்றார். அப்போது அந்த நன்றிகடனுக்கு குடும்பத்தினரிடம் 3 வார்த்தையாவது பேசியிருக்கலாம். ஒருவேளை ஜாதி தடுக்கிறதா? என்பது தெரியவில்லை'' என்று கூறினார்.
அருண்ராஜ் சொல்வது என்ன?
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேரில் 12 முதல் 13 பேர் வரை பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் கூட்ட நெரிசலில் பலியான சதீஷ் குமாரின் அண்ணன் இப்படி குற்றம்சாட்டி உள்ளார். இது தற்போது பரபரப்பை கிளப்பி உள்ளது.
முன்னதாக, விஜய் வீடியோ காலில் பேசியது பற்றி நேற்று தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் பத்திரிகையாளர்களிடம் கூறினார். அப்போது அவர், ‛‛கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 33 பேரின் குடும்பங்களுடன் விஜய் வீடியோ காலில் பேசியுள்ளார். அடுத்தக் கட்டமாக கரூர் செல்வதற்கு அனுமதி கேட்டு டிஜிபி அலுவலகத்திற்கு இ மெயில் மூலமாக கடிதம் அனுப்பி உள்ளோம்'' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications