தேசிய கொடியில் மோடி காசு பார்க்கிறார்: ஜோதிமணி! தமிழக காங்கிரசிலிருந்து தொடர்ந்து சீறும் ஒற்றை குரல்
கரூர்: தேசியக் கொடி மூலம் பிரதமர் மோடி காசு பார்ப்பதாக கூறி பரபரப்பை கிளப்பியிருக்கிறார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி.
மேலும், தேசப்பற்றுக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் பலரும் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் நிலையில், பாஜக பற்றி துணிச்சலுடன் கரூர் முதல் டெல்லி வரை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் ஜோதிமணி எம்.பி.

ஜோதிமணி பதிவு
''தேசப்பற்றிற்கும் பாஜகவுக்கும் ஒரு தொடர்பும் இல்லையே. எதற்கு இந்த தேசியக்கொடி இயக்கம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.இதிலும் காசு பார்க்கிறார் மோடி! அவமானம்.'' இவ்வாறு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு பாஜகவை சீண்டியிருக்கிறார். இதனிடையே தேசியக்கொடி இயக்கம் என்ற பெயரில் மூவர்ணக் கொடிக்கு ரூ.20 வசூலிக்கப்படுவது நாடு முழுவதும் பேசு பொருளாக உள்ளது.

அனைத்து வீடுகளிலும்
நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் அனைத்து வீடுகளிலும் வரும் 13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதன் அடிப்படையில் 'ஹர்கர் திரங்கா' எனப்படும் தேசியக்கொடி இயக்கம் மூலம் ரூ.20க்கு மூவர்ணக் கொடி வழங்கப்பட்டு வருகிறது. கட்டணம் வசூலித்து தேசியக் கொடியை நாட்டு மக்களிடம் விற்பதா என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றன.

அஞ்சல் அலுவலகங்கள்
அஞ்சல் அலுவலகங்கள் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் தேசியக் கொடிகள் விற்கப்பட்டு வருகின்றன. இது குறித்து கூறியுள்ள ராகுல், பாஜக விற்பது தேசியக் கொடியை மட்டுமல்ல ஏழைகளின் சுயமரியாதையும் சேர்த்து தான் எனக் கூறியிருக்கிறார். தேசியக் கொடியும் தேசப்பற்றும் ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ராகுலின் கருத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில் ஜோதிமணி எம்.பி. இவ்வாறு ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.க்கள்
தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் பலரும் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் நிலையில், பாஜக பற்றி துணிச்சலுடன் கரூர் முதல் டெல்லி வரை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் ஜோதிமணி எம்.பி. தன்னிடம் பூர்வீக இல்லத்தை தவிர வேறு எதுவும் இல்லாததால் எந்தச் சோதனையும் தன்னை நெருங்காது என்பதில் உறுதியாக இருக்கிறார் ஜோதிமணி. இதனால் தான் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நாடாளுமன்றத்திலும் சரி பொதுவெளியிலும் சரி மத்திய அரசை வெளுத்து வாங்கி வருகிறார் ஜோதிமணி.

கவனம் ஈர்ப்பு
அண்மையில் சோனியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதை கண்டித்து மிகவும் ஆக்ரோஷமான முறையில் போராட்டக்களத்தில் வெகுண்டெழுந்தார் ஜோதிமணி. அவரது அதிரடியும் போர்க்குணமும் காங்கிரஸ் கட்சியை கடந்து அகில இந்திய அளவில் கவனம் ஈர்த்திருந்தது. அதேபோல் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட நிகழ்வின் போதும் அது பற்றி டிவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டு எங்கே அழைத்துச் செல்லப்படுகிறோம் எனத் தெரியவில்லை எனக் கூறி பரபரப்பை பற்ற வைத்தார்.
Recommended Video

முக்கியப் பொறுப்பு
இதனிடையே ஜோதிமணி எம்.பி.க்கு காங்கிரஸ் கட்சியில் தேசியளவில் விரைவில் முக்கியப் பதவி ஒன்று வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே ஜோதிமணியை சோனியா முக்கியப் பதவியில் அமர வைப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications