கரூர் நாடாளுமன்றத் தொகுதியை சுற்றி சுற்றி வரும் ஜோதிமணி! தொகுதிப் பங்கீட்டில் திமுகவின் முடிவு?
கரூர்: கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திட்டத்தில் உள்ள ஜோதிமணி எம்.பி., இப்போது தொகுதி முழுவதும் சுற்றிச் சுற்றி வர ஆரம்பித்துள்ளார்.
இன்று கூட மணப்பாறை ஒன்றியத்துக்குட்பட்ட பல ஊர்களுக்கு ஜோதிமணி டூர் செல்கிறார். கடந்த நான்கரை ஆண்டுகளில் இல்லாத வகையில் இப்போது தொகுதி முழுவதும் வலம் வருவதன் பின்னணியில் மீண்டும் கரூர் தொகுதியில் களமிறங்குவதில் ஜோதிமணி உறுதியாக உள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும், ஜோதிமணி எம்.பி.க்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வரும் சூழலில் கரூர் மக்களவைத் தொகுதியை மீண்டும் காங்கிரசுக்கு திமுக ஒதுக்குமா என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும். ஏனெனில் ஜோதிமணியை பொறுத்தவரை மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக தர்ணா, உள்ளாட்சித் தேர்தல் சீட் பங்கீட்டின் போது உள்ளூர் திமுக நிர்வாகிகளுடன் மோதல் என கடந்த காலங்களில் லோக்கல் பாலிடிக்ஸ் காரணமாக பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.
இதனால் தொகுதிப் பங்கீட்டில் கரூர் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதும் ஒதுக்காததும் திமுக தலைமை எடுக்கும் முடிவில் தான் உள்ளது. இதனிடையே காங்கிரஸ் மேலிட வட்டாரத்தில் ஜோதிமணிக்கு மிகுந்த செல்வாக்கு இருப்பதால், கரூர் தொகுதியில் மீண்டும் அவர் களமிறங்குவதில் சிக்கல் இருக்காது என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் ஜோதிமணி ஆதரவாளர்கள்.

ஜோதிமணி மீண்டும் கரூரில் போட்டியிட்டால் அவரை தேர்தலில் வீழ்த்துவதற்கான வியூகத்தை வகுக்கும் பணிகளில் அதிமுக தீவிரமாக உள்ளது. விராலிமலை சட்டமன்றத் தொகுதி கரூர் மக்களவைத் தொகுதிக்குள் வருவதால் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன், சி.விஜயபாஸ்கரும் இணைந்து காங்கிரஸை ஒரு கை பார்க்காமல் விடமாட்டார்கள் போல் தெரிகிறது.












Click it and Unblock the Notifications